சோமவார பிரதோஷம்.. சிவபெருமானுக்கான விரதங்களிலேயே மிகவும் சிறந்தது!
- ஸ்வர்ணலட்சுமி
சோமவார பிரதோஷம் .. விசுவா வசு வருடம் 20 25 நவம்பர் 3ஆம் தேதி திங்கட்கிழமை வரும் சோமவார பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவபெருமான் விரதங்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது சோமவார பிரதோஷம் அதிலும் ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்னாபிஷேகத்திற்கு முன் வருவதனால் மிகவும் சிறப்புக்குரிய நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. திங்கட்கிழமை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும்.
சோமவாரம் என்பதன் பொருள் என்ன?...
சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை விரதம் கடைபிடித்து பிரதோஷ தரிசனம் செய்யும் பக்தர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள்.
சிவபெருமானுக்கு உகந்த நாள் சோமவாரம். "சோம' என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும் 'சந்திரன்' என்றும் பொருள்படும். கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன் தன் நோய் குணமாக வேண்டி சிவபெருமானை மனதார நினைத்து தவம் இருந்ததால் அதனை கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனது நோயை நீக்கியதுடன், நவகிரகங்களில் ஒருவராக திகழும் வாய்ப்பையும் வழங்கினார்.அந்த நாள் 'சோமவாரம் 'ஆகும் என்று கூறப்படுகிறது.
மேலும் பிரதோஷமும் சேர்ந்து வருவது இரு மடங்கு ஆன்மீக முக்கியத்துவத்தை கொண்டுள்ள நாள் ஆகும். பிரதோஷ வேளை யான மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை ரேவதி நட்சத்திரமும் அமைந்துள்ளது இந்த நாளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. இந்த நாள் செய்யும் விரதங்களும், வழிபாடுகளும் துன்பங்கள் போக்கி, தோஷங்கள் நீக்கி அனைத்து யோகங்களும் தரக்கூடியதாகும். சிவபெருமானின் வழிபாடுகளில் சனி பிரதோஷத்திற்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பாக வாய்ந்தது சந்திரனுக்குரிய திங்கட்கிழமையில் வரும் இந்த சோமவார பிரதோஷம் ஆகும். நிம்மதி இல்லாமல் மன வேதனை, மன அழுத்தம்,குழப்பம் நிறைந்த வாழ்க்கை நடத்துபவர்கள் அவற்றிலிருந்து விடுபட்டு நிம்மதியான,அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை பெற இந்த விரத நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்வது அதீத சிறப்பு.
வழிபாடுகள்:
இந்த சோமவார பிரதோஷ நாளில் நந்தி பகவானுக்கு சிவாலயங்களில் அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெறும். அந்த அபிஷேகத்தில் கலந்து கொள்ள கோவிலுக்கு செல்பவர்கள் அபிஷேகப் பொருட்கள்,அருகம்புல், வில்வம்,மலர்கள் வாங்கி செல்வது சிறப்பு.
பக்தர்கள் அவரவர் வேண்டுதல்களை நந்திப் பெருமானின் காதுகளில் முறையிட்டால் அவர்களுடைய துன்பங்கள் நீங்கி, அனைத்து வளங்களும், நலங்களும் கிட்டும்.
இந்த சோமவார பிரதோஷ நாளில் த்ரியோதசித் திதியும் சேர்ந்து வருகிறது. சிவபெருமானை வழிபடுவதற்கும் பூஜிப்பதற்கும் மிகவும் புனித காலமாக கருதப்படுகிறது. நேரம் மாலை 5: 34 மணி முதல் இரவு 8 :11மணி வரை பிரதோஷ பூஜை.
பிரதோஷ காலத்தில் சிவனும்,பார்வதி தேவியும் கைலாய மலைக்குச் சென்று அவர்களிடம் உண்மையாக பிரார்த்தனை செய்பவர்களை ஆசீர்வதிப்பதாக நம்பப்படுகிறது. இந்த விரதத்தை நம்பிக்கையுடனும்,முழு மனதுடனும்,ஒழுக்கத்துடன் கடைப்பிடிப்பதன் மூலம் உள்வலிமை மற்றும் இணக்கமான வாழ்க்கைக்கான ஆசீர்வாதங்களை சிவபெருமான் அளிப்பார்.
சோம பிரதோஷம் அன்று கூற வேண்டிய ஸ்லோகம் :
ம் ருத்யுஞ் ஜயாய ருத்ராய
நீலகண்டாய சம்ப வே.
அம்ருதே சாய சர்வாய...
எனும் மந்திரம் ஜெபிப்பது சிறப்பு.
'ருத்ரம் 'என்று அழைக்கப்படும் மந்திரங்கள் பிரதோஷ நேரத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவை.
ஓம் நமசிவாய.
ஓம் முக்கண் முதல்வனே போற்றி.!!
ஓம் சங்கரி துணைவனே போற்றி!!
ஓம் அண்ணாமலையானே போற்றி!!
சோமவார பிரதோஷ விரதம் இருப்பதனால் சோதனைகள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.
மேலும் இன்று பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாடும் அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.