உலக மனித ஆவி தினம்.. பயப்படாம வாங்க கொண்டாடலாம்.. நல்ல விஷயம்தான்!

Su.tha Arivalagan
Feb 17, 2026,04:26 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc, B.Ed, B.A(Hindi)


இன்று நாம் கொண்டாடப்படும் தினத்தின் பெயரைக் கேட்டதும் பயந்து விடாதீர்கள்.


அப்படி என்ன தினம்?




நான் எல்லாம் பேய், ஆவி, பூதம் இதற்கெல்லாம் பயப்படுற ஆள் கிடையாது என்று தைரியமாக சொல்லிக் கொண்டு உள்ளுக்குள்ளே பயந்த அனுபவம் இருக்கிறதா ?


வாங்க வாங்க பயப்படாம அந்த தினத்தை பற்றி தெரிந்து கொள்வோம். 


 உலக மனித ஆவி தினம் (World Human Spirit Day) தான் இன்று அதாவது பிப்ரவரி 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. 


உலக மனித ஆவி தினம் என்பது மனிதர்களின் உள்ளுணர்வு, கருணை, அன்பு, ஒற்றுமை மற்றும் ஆன்மீக வளர்ச்சியை வலியுறுத்தும் ஒரு சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. 


இந்த நாள், மனித வாழ்வின் ஆழமான அர்த்தத்தை உணர்த்தி, ஒவ்வொருவரிடமும் உள்ள மனிதநேய ஆவியை விழிப்பூட்டும் நோக்கத்துடன் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் பொதுவாக பிப்ரவரி 17 அன்று அனுசரிக்கப்படுகிறது. 


இது ஒருவரின் உள்ளார்ந்தமாக நல்ல செயல்களை செய்வதற்கும், மன அமைதியாக இருப்பதற்கும் மற்றும் உலக சகோதரத்துவத்தை போற்றுவதற்கும் கொண்டாடப்படுகிறது.


உடல் என்பது வெளிப்புறமாக காணப்படும் ஒரு பகுதியாகும். ஆனால் ஆவி என்பது உள்ளார்ந்த சக்தியாகும்.

அன்பு மற்றும் கருணை சகிப்புத்தன்மை, நேர்மை, தன்னம்பிக்கை, பிறரை மதிக்கும் பண்பு என பல்வேறு இரக்க குணத்துடன் காணப்படும் பண்பாகும்.


பல மகான்கள் தங்கள் உறுதியான மனவலிமையால் உலகத்தை மாற்றியுள்ளார்கள். அவர்களைப் போல் நாமும் சிறப்பாக வாழ வேண்டும்.


மனிதர்களிடையே ஒற்றுமையை வளர்த்து, நல்ல செயல்களை செய்ய ஊக்குவித்து, மனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி  தன்னம்பிக்கை மற்றும் ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும்.


பலர் தங்கள் மனவலிமையாலும் மனிதநேயத்தாலும் உலக மக்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டி உள்ளார்கள். மனிதர்களாகிய நாம் அனைவரும் வாழும் நாட்களை  சிறப்பாக வாழ்ந்து காட்டுவோம். 


அஹிம்சையின் மூலம் காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தை நடத்தி நமக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தார்.அவர் அரிச்சந்திரன் கதையை படித்ததிலிருந்து உண்மையே பேச ஆரம்பித்தார் .


ஏழை மக்களுக்கும், தொழுநோய் போன்ற நோயால் பாதிக்கப்பட்டவருக்கும் இரக்க குணத்துடன் அன்னை தெரசா சேவை செய்தார்கள். 


மனிதர்களுக்கு இடையே காணப்படும் இன வேறுபாட்டுக்கு எதிராக நெல்சன் மண்டேலா  போராடினார். இப்படி நாம் பல நபர்களை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு அவர்களின் ஆவி வலிமையால் உலகத்தை மாற்றினார்கள் என்பதை உணர்ந்து கொண்டு நாமும் அவர்களை போல் வாழ முயற்சி செய்வோம். 


மக்களிடம் பெரிதும் காணப்படும் வறுமை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள், மன அழுத்தம் இவற்றை சமாளிக்க மனிதர்களிடையே அன்பும் ஒற்றுமையும் அவசியம் தேவைப்படுகிறது. சமூக ஊடகங்கள் வளர்ந்து கொண்டு வருவதால்  மனித உறவுகளின் மதிப்பு தற்பொழுது குறைந்து கொண்டு வருகிறது.  இனிவரும் காலங்களில்  ஒவ்வொருவரும் மனிதர்களின் மனதை புரிந்து செயல்பட முயற்சி செய்வோம்.


இன்றைய தினத்தை சிறப்பாக கொண்டாட நாம் செய்ய வேண்டியவை :


மனித ஆவியை சிறப்பாக வளர்ப்பதற்கு தினமும் தியானம் செய்ய வேண்டும். நல்ல புத்தகங்களை தினமும் படிக்க வேண்டும். பிறருக்கு உதவி செய்யும் பண்பை பெற வேண்டும். தவறு செய்தால் மன்னிப்பு கேட்க வேண்டும்.  நம்மை சுற்றி காணப்படும் இயற்கையை பாதுகாக்க வேண்டும்.  ஆன்மீக வளர்ச்சி என்பது மதத்தைச் சார்ந்ததல்ல; அது மனதின் தூய்மையைப் பொறுத்தது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.


நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து காட்டுவோம்.  அனைவரிடமும் அன்பாக பழகுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.


இன்றைய நாளில் இருந்து குழந்தைகளிடம் பேய், பூதம், ஆவி என்று பயமுறுத்துவதை தவிர்ப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)