நீரின்றி உயிரில்லை.. நீரை சேமிக்கப் பழகுவோம்.. World Water Day

Su.tha Arivalagan
Mar 22, 2026,10:16 AM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc, B.Ed


நீரின்றி வாழ முடியாது. நீரை சேமிக்க பழகுவோம்.  நீரின்றி அமையாது உலகு என்ற பழமொழிக்கு ஏற்ப இன்றைய நாளை சிறப்பாக கொண்டாடுவோம். 


உலக நீர் தினம் (World Water Day) 


உலக நீர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று கொண்டாடப்படுகிறது. இதை United Nations நிறுவனம் 1993ஆம் ஆண்டிலிருந்து இந்த நாள் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. நீரின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதே இன்றைய நாளின் நோக்கமாகும்.


மனித வாழ்விற்கு உணவு, உடை, உறைவிடம் தேவை என்றாலும் அதை விட மிகவும் அவசியமானது நீர் ஆகும். உணவு இல்லாமல் கூட உயிர் வாழ்ந்திடலாம். ஆனால் நீர் இல்லாமல் உயிர்கள் வாழ முடியாது. இப்படி சிறப்பு வாய்ந்த நீரினை பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும்.




பூமியின் பெரும்பகுதி நீராக இருந்தாலும், சுத்தமான குடிநீர்  குறைவாகவே காணப்படுகிறது. குடிநீர் வளங்களை பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும்.


கிடைக்கின்ற  நீரை வீணாக்காமல் பயன்படுத்துவோம். மழைநீர் சேகரிப்பு மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் மழைநீர் சேமிப்பு தொட்டியை பயன்படுத்துவோம். நீர் மாசுபாடு மனித ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம். தொழிற்சாலைகள் வெளியிடும் கழிவுகள் நீரை மாசு படுத்துவதோடு அங்கு வாழும் நீர் வாழ் உயிரினங்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன என்பதை உணர்ந்து நீரினை தூய்மையாக பாதுகாப்போம்.


நதிகள், குளங்கள், ஏரிகள் சுத்தமாக பாதுகாப்பது பொது மக்களாகிய நமது அனைவரின் கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோம். விவசாயத்திற்கும் நீர் அத்தியாவசியமாக பயன்படுகிறது. நீர் இல்லாமல் உணவு உற்பத்தி செய்ய முடியாது. மேலும் உலகில் பல நாடுகளில் நீர் பற்றாக்குறையாக காணப்படுகிறது.  


சிலர் இன்னும் தூய்மையான குடிநீர் இல்லாமல் வாழ்கிறார்கள். விலை கொடுத்து நீரினை வாங்கிக் கொண்டு சமைப்பதற்கும், குடிப்பதற்கும் மட்டும் பயன்படுத்தி வருகிறார்கள் . சிறு துளி பெரு வெள்ளம் என்பதை உணர்ந்து ஒவ்வொரு துளி நீரையும்  சேமிப்பது எதிர்காலத்திற்கான முதலீடாகும். ஒவ்வொருவரும் தினசரி வாழ்வில் நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்.


கசிவு உள்ள குழாய்களை உடனே சரிசெய்வோம். மரங்கள் வளர்த்து நீர்வளத்தை பாதுகாப்போம். சுற்றுச்சூழலை பாதுகாப்பதும் நீர் பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதை உணர்ந்து சுற்றுச்சூழலையும் பாதுகாப்போம். அரசு மற்றும் மக்கள் இணைந்து செயல்பட்டு நீரைப் பாதுகாப்பது மனித குலத்தின் பொறுப்பு என்பதை உணர்ந்து  செயல்படுவோம்.


“நீர் சேமிப்பு – உயிர் பாதுகாப்பு” என்பது முக்கியமான செய்தி என்பதை உணர்ந்து பார்ப்போம். நீரை மதித்து சிக்கனமாக பயன்படுத்துவோம். நீர் வளங்களை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.