இன்றைய உலகுக்கேற்ற.. நவீன ஆத்திச்சூடி!
- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி
அன்பு வழி நில் -
(யாரிடமும் வெறுப்பைக் காட்டாமல் கனிவாக இரு)
ஆய்ந்து செயல்படு -
(தகவல்களைச் சரிபார்க்காமல் எதையும் நம்பாதே)
இலக்கு நோக்கி ஓடு -
(வாழ்வில் தெளிவான குறிக்கோளை அமைத்துக்கொள்)
ஈகோ விடுத்து வாழ் -
(தற்பெருமையை விட்டுவிட்டுப் பிறரோடு இணக்கமாக இரு)
உழைப்பை உயர்த்து -
(சோம்பலின்றி கடினமாகப் பணியாற்று)
ஊழ்வினை வெல்லு -
(விடாமுயற்சியால் விதியை மாற்று)
எண்ணம் செதுக்கு -
(நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக்கொள்)
ஏழைக்கு உதவு -
(உன்னால் இயன்ற உதவியைச் சமூகத்திற்குச் செய்)
ஐயம் இன்றித் தெளி -
(குழப்பமில்லாமல் தெளிவான முடிவெடு)
ஒழுக்கம் உயர்வு தரும் -
(தனிமனித ஒழுக்கமே உனது அடையாளம்)
ஓய்வை முறையாகப் பெறு -
(உடல் மற்றும் மன நலம் காக்க போதிய ஓய்வு எடு)
ஔவியம் பேசாதே -
(யாரைப் பற்றியும் பொறாமையோடு புறம் பேசாதே)
அஃதுணர்ந்து நட -
(எது சரி எது தவறு என்பதை உணர்ந்து நிதானமாக செயல்படு)
(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது போன்ற 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)