கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!

Su.tha Arivalagan
Nov 15, 2025,10:48 AM IST

- பி.சுப்புலட்சுமி


நேற்று மாலை 4மணி... என்னை சந்திக்க ஒரு அம்மா தனது 13 வயது குழந்தையுடன் வந்திருந்தார். பெற்றோர்  இருவரும் அரசு  அதிகாரிகள். என்னிடம்  கணிதம் படிக்க வைக்க வேண்டும். அவர்களின் விருப்பம்.


உலகச் சாதனை படைத்த பள்ளியில் படிக்கவைக்கிறோம்.  லட்சங்களை செலவழிக்கிறோம். மதிப்பெண்கள் நாங்கள் நினைத்தபடி இல்லை. எப்படியாவது முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும். ஐஐடியில் சேர்க்க வேண்டும். 


நியாயமான ஆசைதான்...

 

ஏன் இவ்வளவு தூரமான பள்ளியில் சேர்த்தீர்கள்?.... பள்ளியிலேயே வீட்டுப்பாடங்களை முடிக்க வைத்து அனுப்புவார்களாம். பள்ளியில் முடித்தால் அது  பள்ளிப்பாடம்... மறந்து விடுகிறார்கள்.


ஏதாவது விளையாட்டில் ஆர்வம் உள்ளதா? விளையாட அனுப்ப நேரமில்லை. டேபிள் டென்னிஸ் அனுப்பினோம்.  விளையாண்டால் நேரம் வீணாகிறது. அவனது அப்பா விளையாட்டு வீரர் ஒதுக்கீட்டில் அரசுப்பணியமர்ந்தவர் என்பது  வேடிக்கையாகவே இருந்தது.




"காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுதும் விளையாட்டு வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா! "


மகாகவி எங்கே?...


உனக்கு பிடித்த புத்தகம் என்னப்பா?

தடுமாறுகிறான்.

வாசிப்பை வழக்கப்படுத்தவில்லை.

மேடம்!  இவனுக்கு தமிழ் வராது என்று புன்னகையோடு சொன்னவுடன் மனம் வலித்தது.


சாப்பிடவே மாட்டானாம்...

கேட்டுக் கேட்டு தான் உணவு சமைக்கப்படுமாம்!

இவர்கள் பழக்கிவிட்டு அவர்களை 

குறை கூறுவது? என்ன நியாயம்?

படித்தவர்களுக்கும் பார்வை இல்லை.


உண்ணும் உணவைக் கழிக்கும் குழந்தைகள் உன்னத நிலையை எப்படி அடையும்?

உறவுகளை நேசிக்காத குழந்தை

எப்படி இந்த உலகில் பறந்து பரவ முடியும்?


சாலையோரக் குழந்தைகளை காட்டித்தர 

அப்பாக்கள் மறந்து விடுகிறார்கள்.


சங்கடங்களையும், சக உயிரின நேசத்தையும் சொல்லித் தர அம்மாக்கள் மறந்து விடுகிறார்கள்.


கீழே கிடக்கும் பொருட்களை குனிந்து எடுக்கும் பண்புகள் பழக்கப்படுத்தவில்லை.


வெளியே போகும்போதும், தனியாய் வரும்போதும் கால்கள் வலுக்க நடப்பது பெரும்பாலான குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை.


ஒத்துப்போகும் தன்மையை (adjustability) கற்றுக்கொடுக்கும் இடத்தை ஒற்றைப்பிள்ளை மோகம் ஒதுக்கி தள்ளுவது தெள்ளத்தெளிவாகியது.


பிடிக்காது...

வராது....

வீணாகும்.....

என்று எதிர்மறையை 

கற்றுத்தரும் பெற்றோர்கள் குழந்தையின் ரிசல்ட் மட்டும் நேர்மறையாக வேண்டினால் எப்படி???


அம்மாக்களுக்கும், அப்பாக்களுக்கும் பிடிக்காதது எல்லாம் குழந்தைகளுக்கு பிடிக்காமல் போகிறது என்பது தான் உண்மை. 

உணவாகட்டும்! உடையாகட்டும்!

பிடிக்காது என்ற வார்த்தையை பிடிக்காமல்

போகச் சொல்லித் தந்தால் பிள்ளை  பேர் சொல்லும் 

பிள்ளையாவான்..

தமிழ்ச்சமூகம் தடுமாறித் தான் நிற்கிறது.

 

ஒவ்வொரு துறையையும் தேர்ந்தெடுக்கும்

போது அந்தத்துறை அந்தந்த குழந்தைகளின் உள்ளார்ந்த உணர்வுகளுக்கும், லட்சியங்களுக்கும்

ஏற்றது தானா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

குழந்தையின் படிப்பு, மதிப்பெண் என்பதை விட

அவர்களுக்கு பிடித்து செய்கிறார்களா

என்பது  கவனிக்கப்படல் வேண்டும்.


இந்த அழகான கிரகத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் குறிப்பிட்ட பணியை நிறைவேற்றுவதற்காகவே 

படைக்கப்பட்டுள்ளது.


அம்மாக்களும், அப்பாக்களும் தங்கள் விருப்பங்களை திணிக்காமல் குழந்தைகளின் உள்மனது ஆசைகளை பன்மடங்கு 

பெருக்கி விரும்பியதை தேர்ந்தெடுத்து முன்னேற தோள் கொடுத்தால் வெற்றி பன்மடங்காகும்.


அவனது அம்மாவிடம் தனியாக சொல்லிய போது சில கண்ணீர்த் துளிகள் கண்ணாடிக்குள்ளிருந்து ஊர்ந்து ஊர்ந்து வெளிவந்ததை பார்க்க முடிந்தது.


கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமே அல்ல.

சுற்றியுள்ள ஒவ்வொன்றிடமும்

விட்டுக்கொடுத்தும், 

பற்றி வாழ்தலுமே!


ஜப்பானிய “இகிகாய்”:


1. குழந்தை எதை விரும்புகிறான்.


2. அவன் எதில் திறமை பெற்றவன்.


3. உலகிற்கு என்ன தேவை.


4. அவனால் எதற்காக சம்பளம் பெற முடியும்.


இந்த நான்கும் ஒரே இடத்தில் ஒட்டும் பகுதி தான் இகிகாய்!

ஒவ்வொரு குழந்தையின் " Ikigai" யும்

உள்ளிருந்து வெளிவர மட்டுமே துணை நிற்போம்!


 "அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்".


மனிதம் செழித்து, மானுடம் வெல்லும் குழந்தைகளை உருவாக்குவோம்.


(பி.சுப்புலட்சுமி எம்ஏ, எம்சிஏ, பிஎட் படித்தவர். சென்னையைச் சேர்ந்தவர் ஆசிரியை மற்றும் தமிழ் எழுத்தாளர்)