ஆடி 4.. நாளை ஆடிக் கிருத்திகை.. மனம் உருக அழையுங்கள்.. மயிலேறி வருவான் முருகன்!

Swarnalakshmi
Jul 19, 2025,01:33 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஆடிக்கிருத்திகை: விசுவா வசு வருடம் 20 25 ஜூலை  20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆடி மாதம் நான்காம் நாள்  ஆடி கிருத்திகை கொண்டாடப்படுகிறது ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் விசேஷமானது . இந்த நாள்  மனதார முருகனை நினைத்து விரதம் இருந்து வழிபடுவதால் வாழ்க்கையில் உள்ள தடைகள் அகன்று நமது கர்ம வினைகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.


20.7.2025  ஞாயிறு அதிகாலை 12:14 முதல் இரவு 10:36 மணி வரை. 27 நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம் கார்த்திகை ,முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரமாகும். இந்த ஆடி மாதம் இருமுறை கார்த்திகை நட்சத்திரம் வருவது மிகவும் விசேஷமானது.


சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து வெளிப் பட்டு ஆறு தாமரை மலர்களில் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாறினார். இவர்களை வளர்க்கும் கார்த்திகை பெண்களை சிறப்பிக்கும் விதமாக கார்த்திகை நட்சத்திரமாகவும், முருகனுக்கு உரிய விரதமாக போற்றப்படவும் வர மளித்தார் சிவபெருமான்.




எனவே  இந்நாளில்  விரதம் இருந்து முருகனை வழிபட கார்த்திகை பெண்களின் அருளாலும், முருகப்பெருமானின் அருளாலும் குழந்தை வரம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடிக்கிருத்திகை  தட்சணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் கிருத்திகை விரதம் ஆகும். இந்த மாதம் சக்தியையும், முருகனையும் வழிபட நினைத்தது தடையின்றி நடக்கும் என்று நம்பப்படுகிறது.


முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் கோவிலில் ஜூலை 20 ஆம் தேதி ஆடி கிருத்திகை கொண்டாடப்பட உள்ளது. அதே நேரம் திருத்தணி, திருச்செந்தூர், பழனி ஆகிய ஸ்தலங்களில் உள்ள முருகன் கோவிலில் ஆகஸ்ட் 16ஆம் தேதி ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முருக பக்தர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.


ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதியும் , கிருத்திகை நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் பிரம்மா ,விஷ்ணு  சிவன் ஆகிய முப்பெரும் தேவர்களையும், முருகனையும் நினைத்து வழிபாடு செய்ய எந்த வேண்டுதல் வைத்தாலும் உடனடியாக நிறைவேற்றி தருவார். அருகிலுள்ள முருகன் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது சிறப்பு. வீடுகளில் இருப்பவர்கள் முருகன் படத்திற்கு அலங்காரம் செய்து, செவ்வரளி, செம்பருத்தி, மற்றும் வாசனை மலர்களை  வைத்து, ஷட்கோண கோலமிட்டு அதில் "சரவணபவ "என்று எழுதி 6 நெய் தீபங்கள் ஏற்றி பால், நாட்டு சர்க்கரை  ,பழங்கள் ,தினை மாவு ,நாட்டு வெல்லம் அவரவர் வசதிக்கு ஏற்ப நைவேத்தியம் செய்து தீப தூப ஆராதனைகள் செய்து முருகனை வழிபடுவது சிறப்பு.


மேலும் விரதம் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், கந்தர் அனுபூதி, குமாரஸ்தவம் ,வேல்மாறல், திருப்புகழ் போன்ற முருகன் பாடல்கள் பாடி, படித்து முருகனை நினைத்து வழிபட "வேலுண்டு வினையில்லை ;கந்தன் உண்டு கவலையில்லை; அனைவருக்கும் முருகன் அருள்  கட்டாயம் கிடைக்கும்.


மனம் உருகி முருகா ....என்று கூப்பிட மயிலேறி வருவார் முருகன். அனைவரும் முருகன் அருள் பெற்று நலமுடனும், வளமுடனும் வாழ்வோமாக. மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள்  தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.