டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக பல்வேறு பிரிவுகளில் போட்டு தேர்வுகள் நடத்தப்படுகிறது. அந்த தேர்வுகளில் குரூப் 4 தேர்விற்கு கல்வி தகுதி 10ம் வகுப்பு என்பதால் இந்த தேர்வை அதிகமானோர் எழுதி வருகின்றனர். இந்த தேர்வின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 3935 பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் 25ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதில் விருப்பமுள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இணையத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. கடைசி நேரத்தில் விண்ணப்பம் செய்யும்போது இணைய பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் மே 24 சனிக்கிழமை நள்ளிரவு 11:59 வரை டிஎன்பிசி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பத்தில் திருத்தங்களை செய்ய மே 29 முதல் 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப்-4 தேர்வுகள் ஜூலை 12ம் தேதி காலை 9.30 மணி முதல் 12 .30 வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.