அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கு: திடீரென வாபஸ் பெற்ற டி.ஆர்.பாலு

Su.tha Arivalagan
Jun 30, 2026,12:54 PM IST

சென்னை: தமிழக முன்னாள் பாஜாக தலைவர் கே.அண்ணாமலைக்கு எதிராக திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு தொடர்ந்திருந்த ரூ.100 கோடி அவதூறு வழக்கு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பின்னணி என்ன?

கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தமிழக பாஜக தலைவராக இருந்த போது கே.அண்ணாமலை "DMK Files" (திமுக ஃபைல்ஸ்) என்ற பெயரில் திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.பாலுவின் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும், சொத்து விவரங்களும் அண்ணாமலையால் முன்வைக்கப்பட்டன. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அண்ணாமலை அவதூறு பரப்பியுள்ளார் என்றும் கூறி டி.ஆர்.பாலு நீதிமன்றத்தை நாடினார். அண்ணாமலை தனக்கு ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.


குறுக்கு விசாரணையும் வழக்கு வாபசும்!




இந்த அவதூறு வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. சமீபத்தில், நீதிமன்ற விசாரணையின் போது அண்ணாமலை தரப்பில் டி.ஆர்.பாலுவிடம் தீவிர குறுக்கு விசாரணை (Cross-examination) நடத்தப்பட்டது. அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர்கள் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகள் மற்றும் குறுக்கு விசாரணையின் அழுத்தத்தைத் தொடர்ந்து, தற்போது இந்த வழக்கைத் தொடர விரும்பவில்லை என டி.ஆர்.பாலு தரப்பு முடிவெடுத்துள்ளது. அதன் அடிப்படையில், அண்ணாமலைக்கு எதிராகத் தொடரப்பட்ட ரூ.100 கோடி அவதூறு வழக்கை டி.ஆர்.பாலு அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளார்.


அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு : 

திமுகவின் மிக முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.பாலு, அண்ணாமலையின் குறுக்கு விசாரணைக்குப் பிறகு வழக்கை வாபஸ் பெற்றிருப்பது தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. "வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், குறுக்கு விசாரணையை எதிர்கொள்ள முடியாததாலுமே திமுக இந்த வழக்கில் இருந்து பின்வாங்கியுள்ளது" என பாஜகவினர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


மறுபுறம், இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் மற்றும் திமுக தரப்பின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன என்பது குறித்த விரிவான விளக்கங்கள் இன்னும் வெளியாகவில்லை. எப்படி இருந்தாலும், "DMK Files" விவகாரத்தில் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டிருப்பது அண்ணாமலை தரப்பிற்கு கிடைத்த வெற்றி என்றே பார்க்கப்படுகிறது.