கொளுத்துது வெயிலு.. குளுகுளு கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்.. செம டிராபிக்!

Manjula Devi
Apr 27, 2024,05:11 PM IST

சென்னை: கொடைக்கானலில் கோடைகால சீசன் துவங்கியுள்ள நிலையில்,  சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவு வருவதால் கடும் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த  போதுமான டிராபிக் போலீசாரை பணியமர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோடைக்காலம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மலைகளின் இளவரசி கொடைக்கானலும், மலைகளின் ராணி ஊட்டியும்தான். கொடைக்கானல், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலரும் இங்கேதான் வளர்கிறது.  கொடைக்கானல் அருமையான சுற்றுலா தளம். இங்குள்ள குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவிலும் பிரசித்தி பெற்றது. கோடை காலத்திலும் குளுமை நிலவுவதால் மக்களுக்கு ஏற்ற சுற்றுலா தளமாக கொடைக்கானல் விளங்குகிறது. அதிலும் குறிப்பாக குறைந்த பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல திட்டமிட  இது ஏற்ற இடமாக அமைந்துள்ளதால்  மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.




ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டில் மே மாதத்தில் வரும்  அக்கினி நட்சத்திரம் காலகட்டத்தில் வெயில் வாட்டி எடுத்து வருவது வழக்கம். இந்த சமயத்தில்  பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்படும். இதனால் மக்கள் கோடை வெயிலுக்கு இதமான ஊட்டி, கொடைக்கானல், மூணார், குன்னூர் போன்ற கோடை வாசஸ்தலங்களுக்கு அதிகமாக படையெடுப்பர் .அந்த வகையில் இந்த வருடம் வெயில் காலத்தை சமாளிக்க குளுமையைத் தேடி கொடைக்கானலில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.


பெருமளவிலான மக்கள் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில்  கொடைக்கானலுக்கு வருவதால், இங்கு போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். போதிய அளவில் போலீஸார் பணியில் இல்லாததால் நெரிசலை சரி செய்ய முடியவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 


கொடைக்கானலில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த போதுமான அளவில் டிராபிக் போலீசாரை பணியமர்த்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வாகனங்கள் அதிக அளவில் வருவதைக் கட்டுப்படுத்தவும் போதிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.