ரயில் சேவை ரத்தால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது: கனிமொழி

Su.tha Arivalagan
Feb 24, 2026,06:33 PM IST

சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழியில் ரயில்கள் ரத்தால் பயணிகள் அவதியடைவது வேதனை தருகிறது என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.


சென்னை கடற்கரை - தாம்பரம் வழியில் தினமும் 200க்கு மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் சேவையை 3 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.




இந்நிலையில், இது குறித்து கனிமொழி எம்பி  வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாட்களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுவருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது.


ஏற்கனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது, அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. குறிப்பாக வரும் வாரங்களில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.