குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு!
டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சுவுகான் மற்றும் முப்படை தளபதிகள் சந்தித்தனர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பஹல்காமில் தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட ஒன்பது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்திய எல்லைக்கோட்டை தாண்டாமல், ஏவுகணைகள், ட்ரோன்கள் வாயிலாக இந்தியா நடத்தி முடித்த துல்லிய தாக்குதல், உலக நாடுகளை அசர வைத்தது. இந்த தாக்குதலின் முடிவாக தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை, போர் நிறுத்தத்திற்கு இரவும், பகலும் பாடுபட்டு நாட்டை காத்த முப்படைகளுக்கும், ராணுவத்திற்கும் பிரதமர் மோடி தலைவணங்கியுள்ளார்.
இதனையடுத்து, நேற்று பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு நேரில் சென்றார் பிரதமர் மோடி. தீவிரவாதிகளை ஒழிப்பதற்கான ஆபரேசன் சிந்தூரில் பங்கேற்ற வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். அதன்பின்னர் பிரதமர் மோடி அங்கு பேசுகையில், முப்படைக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். உங்களை பார்ப்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது. பயங்கரவாதத்தை மண்ணோடு மண்ணாக்கினீர்கள். நம்மை அழிக்க நினைத்தவர்களை நீங்கள் அழித்தீர்கள். பாகிஸ்தானின் தாக்குதலை நாம் வெற்றிகரமாக கையாண்டோம் என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவரது இல்லத்தில் முப்படை தளபதிகள் மற்றும் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் சந்தித்து பேசினார். ராணுவ தளபதி உபேந்திர திவேதி, விமானப்படைத் தளபதி மார்ஷல், கடற்படைத் தளபதி தினேஷ் திரிபாதி ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்து எடுத்துறைத்தனர். இந்திய படைகளின் வீரம் மற்றும் அர்ப்பணிப்பு நாட்டை பெருமை கொள்ளச் செய்துள்ளதாக குடியரசுத் தலைவர் முர்மு அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.