ஒரே நேரத்தில் அண்ணன் தம்பியை மணந்த பழங்குடியினப் பெண்.. சிம்லாவில் ஆச்சரிய திருமணம்
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண், அண்ணன், தம்பியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அந்த பழங்குடியினப் பிரிவில் பல தார மணம் என்பது சர்வ சாதாரணமான வழக்கமாகும். நூற்றுக்கணக்கானோர் புடை சூழ இந்தத் திருமணம் நடந்தேறியுள்ளது.
இமாச்சலப் பிரதேச மாநிலம் ஷில்லை என்ற கிராமத்தில் ஹட்டி என்ற பழங்குடியின மக்கள் வசிக்கிறார்கள். அங்குதான் இந்த திருமணம் நடந்துள்ளது. இந்த பழங்குடியினப் பிரிவில் பல தார மணம் என்பது பாரம்பரியமாகவே நடந்து வரும் ஒரு வழக்கமாக உள்ளது. அதேசமயம், ஒரே நேரத்தில் அண்ணன் தம்பியை ஒரு பெண் திருமணம் செய்தது சற்று அரிதானதாக கருதப்படுகிறது.
மணப்பெண் சுனிதா சவுகான் மற்றும் மாப்பிள்ளைகள் பிரதீப் மற்றும் கபில் நெகி ஆகியோர் எந்தவித அழுத்தமும் இன்றி இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தனர்.
சிரமூர் மாவட்டத்தின் டிரான்ஸ்-கிரி பகுதியில் ஜூலை 12 அன்று தொடங்கிய இந்த மூன்று நாள் விழாவில், உள்ளூர் நாட்டுப்புறப் பாடல்களும் நடனங்களும் மெருகூட்டின. இந்தத் திருமண விழாவின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.
டிரான்ஸ்-கிரியில் உள்ள பதானா கிராமத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் இத்தகைய ஐந்து திருமணங்கள் நடந்துள்ளன. குன்ஹத் கிராமத்தைச் சேர்ந்தவர் சுனிதா. இந்தத் திருமணம் குறித்து அவர் கூறுகையில், எனக்கு இந்த பாரம்பரியம் குறித்து நன்றாகத் தெரியும். எனது முழு விருப்பத்துடன்தான் இந்தத் திருமணம் நடந்தது. எனக்கு எந்த அழுத்தமும் தரப்படவில்லை. முன்னோர்கள் உருவாக்கிய வழக்கம் இது. இந்தத் திருமணத்தை மிகவும் மதிக்கிறேன் என்று கூறினார் அவர்.
மணமகன்களில் ஒருவரான பிரதீப் அரசுத் துறையில் பணிபுரிகிறார், அவருடைய தம்பி கபில் வெளிநாட்டில் வேலை செய்கிறார். சுனிதாவைத் திருமணம் செய்தது குறித்து பிரதீப் கூறுகையில், இது எங்களது பாரம்பரியம். அதைத்தான் நாங்கள் பின்பற்றியுள்ளோம். இதற்காக பெருமைப்படுகிறோம். அனைவரும் இணைந்து எடுத்த முடிவுதான் இது என்றார்.
ஹட்டி சமூகத்தினர் இமாச்சலப் பிரதேசம்-உத்தரகாண்ட் எல்லையில் அதிக அளவில் உள்ள சமூகத்தினர் ஆவர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இந்த பழங்குடி இனத்தில் பலதார மணம் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்தது, ஆனால் பெண்கள் மத்தியில் கல்வி அதிகரித்து வருவதும், அப்பகுதியில் உள்ள சமூகங்களின் பொருளாதார மேம்பாடு காரணமாகவும், பலதார மண சம்பவங்கள் சமீப காலமாகப் பதிவாகவில்லை.
அதேசமயம், பல கிராமங்களில் இத்தகைய திருமணங்கள் ரகசியமான முறையில் நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய திருமணங்கள் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் கூட சமீப காலமாக இவை குறைந்த அளவிலேயே நடப்பதாக ஊர்ப் பெரியவர்கள் கூறுகிறார்கள்.
சொத்துக்கள் கைவிட்டுப் போகாமல் இருப்பதற்காகவும், குடும்பங்களின் ஒற்றுமைக்காகவும், உறவுகள் பிரியாமல் இருப்பதற்காகவும்தான் இத்தகையக பல தார மணங்கள் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகின்றன. சிரமூர் மாவட்டத்தின் டிரான்ஸ்-கிரி பகுதியில் உள்ள சுமார் 450 கிராமங்களில் மூன்று லட்சம் ஹட்டி சமூகத்தினர் வாழ்கின்றனர், சில கிராமங்களில் பலதார மணம் இன்னும் நடைமுறையில் உள்ளது. இது உத்தரகாண்டின் ஜான்சார் பபார் பழங்குடி பகுதியிலும், இமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் பழங்குடி மாவட்டத்திலும் பரவலாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.