அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

Su.tha Arivalagan
Jan 23, 2026,06:11 PM IST

மதுராந்தகம் : மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு உரையாற்றினார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் அவர் ஆற்றிய இந்த உரை, தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.


கூட்டத்தில் பேசிய தினகரன், கடந்த காலங்களில் அதிமுக மற்றும் அமமுக இடையே இருந்த அரசியல் ரீதியான மோதல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசினார். "எங்களுக்குள் சண்டை, சச்சரவுகள் இருந்தது உண்மை தான்; ஆனால் நாங்கள் அனைவரும் 'அம்மா'வின் (மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள்" என்று அவர் குறிப்பிட்டார். தமிழகத்தின் நலன் கருதியும், கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.




கூட்டணியில் இணைந்தது குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "நாங்கள் எந்தவிதமான அழுத்தமும் இன்றி, பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, முழு மனதுடன் இந்த கூட்டணியில் இணைந்துள்ளோம். எங்களது மனதில் இருந்த கோபங்களையும், தாபங்களையும் புறந்தள்ளிவிட்டு தமிழகத்தின் நன்மைக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறோம்" என்று உறுதியுடன் கூறினார்.


தமிழகம் முழுவதும் உள்ள அமமுக தொண்டர்களுக்கு அவர் விடுத்த வேண்டுகோளில். இந்தக் கூட்டணியின் வெற்றிக்காக ஒவ்வொரு தொண்டரும் அயராது பாடுபட வேண்டும். பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இந்த வெற்றியின் மூலம் ஒரு வலுவான உறுதிமொழியை வழங்க வேண்டும். நாங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். பங்காளிகள். மன ஸ்தாபங்களால் பிரிந்து இருந்தோம். இப்போது திமுக.,வை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஒன்றிணைந்துள்ளோம் என்றார். 


இதுவரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து வந்த டிடிவி தினகரன், இன்று "அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி" என்று மேடையில் சொன்னதும் அதிமுக தொண்டர்களும், அமமுக தொண்டர்களும் கைதட்டி உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். கூட்டம் துவங்குவதற்கு முன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் டிடிவி தினகரனுடன் மகிழ்ச்சியுடன் சிரித்து பேசினார்கள். இது தொண்டர்களை மேலும் உற்சாகமடைய செய்தது.