வேலூரில் பிப்ரவரி 23-ல் தவெகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்!

Meenakshi
Feb 17, 2026,06:09 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அகரம்சேரி பகுதியில் பிப்ரவரி 23ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.


தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அதே வேளையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அகரம்சேரி பகுதியில் அவர் பிச்சாரம் செய்ய உள்ளார்.




சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, வேலூர் கூட்டத்திற்கு மாவட்ட காவல்துறை கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதிய இடவசதி, குடிநீர் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க க்யூ-ஆர் கோட் (QR Code) அடிப்படையிலான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏற்கனவே சேலம், ஈரோடு போன்ற இடங்களில் தனது உரையின் மூலம் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை விமர்சித்த விஜய், வேலூர் அகரம்சேரி கூட்டத்தில் எத்தகைய முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் இதற்கான மைதானம் அமைக்கும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 


தவெக வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசுகையில்,  வேலூரை அடுத்த பள்ளிகொண்டா அகரம்சேரி பகுதியில் சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான மேடை மற்றும் திடல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்தும் தொகுதிக்கு 5,000 பேர் வீதம் சுமார் 25,000 முதல் 30,000 பேர் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 50 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் அடங்கிய 'மினி மருத்துவமனை' கூட்ட மைதானத்திலேயே அமைக்கப்பட உள்ளது. 


மேலும் 10 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கும். ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்கள் மற்றும் கேலரி வாரியாக தனித்தனி குடிநீர் தொட்டிகள், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாகன நெரிசலைத் தவிர்க்க 6 இடங்களில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதி (Parking) செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் கூட்டத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. காவல்துறை விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் 100% பின்பற்றி, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இந்த மக்கள் சந்திப்பு நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.