கரூர் சம்பவத்திற்குப் பின்னர் கூடும்.. தவெகவின் சிறப்புப் பொதுக்குழு.. என்ன பேசப் போகிறார் விஜய்?
மாமல்லபுரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் கூடுகிறது. கரூர் சம்பவத்திற்குப் பின்னர் நடைபெறும் முக்கிய பொதுக்குழு என்பதால் விஜய் என்ன பேசப் போகிறார், என்ன தீர்மானம் போடப்படும் என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தொடங்கி 2 ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாக விஜய்யும் தமிழ்நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். ஒவ்வொரு ஊரிலும் கூடிய கூட்டம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அவரது வாராந்திர பேரணிகளுக்கு மிகப் பெரிய கவன ஈர்ப்பும் கூட கிடைத்தது. ஆனால் கரூரில் நடந்த பேரணியின்போது ஏற்பட்ட துயரச் சம்பவம் அந்தக் கட்சியை மொத்தமாக புரட்டிப் போட்டு விட்டது.
கரூர் துயரச் சம்பவத்திற்குப் பின்னர் விஜய் மக்களை சந்திக்கவில்லை, தனது கட்சிக் கூட்டங்களையும் ஒத்தி வைத்து விட்டார். பெரிய அளவில் எந்த நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்காமல் உள்ளார். இந்த நிலையில்தான் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து அவர்களைத் தனித் தனியாக சந்தித்துப் பேசி ஆறுதல் தெரிவித்தார் விஜய். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தான் உறுதி அளித்த நிவாரண உதவிகளையும் கூட அளித்தார்.
இதையடுத்து கட்சி நடவடிக்கைகளை விஜய் மீண்டும் முடுக்கி விட்டுள்ளார். அதன் முக்கியப் பகுதியாக இன்று சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துகிறார் விஜய். மாமல்லபுரத்தில் இன்று முற்பகல் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கட்சியினருக்கு உற்சாகம் தரும் வகையில் விஜய் பேசுவார் என்று தெரிகிறது. மேலும் பல முக்கிய முடிவுகளும் கூட எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் சுற்றுப்பயணம் மீண்டும் எப்போது தொடங்கும் என்பதும் இன்றைய கூட்டத்தின்போது தெரிய வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.