பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை: சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இக்கட்சி தொடக்கத்திலிருந்து 2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலை எதிர்கொண்டு பல்வேறு பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். அதேபோல் கட்சி அறிவிக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்வதற்காக பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறார். மேலும் கட்சியை வலுப்படுத்துவதற்காக மாநாடு, பொதுக்குழு கூட்டம், புத்தக வெளியீடு, கட்சி ஓராண்டு விழா, பரந்தூர் விசிட் என பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கியதில் இருந்து எந்த தலைவரின் பெயரை உச்சரித்து பேசாத விஜய் கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி நடைபெற்ற தவெகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் முதல் முறையா பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது பெயர்களைச் சொல்லி கடுமையாக விமர்சித்து பேசினார்.
விஜய் பேசும்போது, மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே, அப்பா என்று உங்களை அழைக்கச் சொல்கிறீர்களே.. ஆனால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறதே.. ஒரே நேரத்தில் காங்கிரஸுடனும், பாஜகவுடனும் கூட்டணி வைத்திருக்கும் கட்சி திமுக என்று கடுமையாக விமர்சித்தார். மேலும் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே என்று குறிப்பிட்ட அவர், பெயரைச் சொன்னால் மட்டும் போதாது, செயல்பாடும் இருக்க வேண்டும் என்று விமர்சித்தார்.
இந்நிலையில், சென்னை பனையூரில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நாளை மதியம் 12 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. இந் கூட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் தெரிகிறது. மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.