தவெக தலைமை அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

Su.tha Arivalagan
Feb 06, 2026,05:01 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை பனையூர் பகுதியில், அக்கட்சியினரால் தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அந்தப் பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 


நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், தேர்தல் களத்தில் இறங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் விநியோகிக்கும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்குத் திரண்டு வருகின்றனர்.


அலுவலகத்திற்கு வரும் நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பனையூர் பகுதியில் வழக்கத்திற்கு மாறான போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் பலரும் தவெக கட்சியினர் மீது கடுமையாக குற்றம்சாட்டி, புகார் தெரிவித்து வருகின்றனர். 

கட்சி நிர்வாகிகள் தங்கள் வாகனங்களை அலுவலகத்தைச் சுற்றி உள்ள குடியிருப்புப் பகுதிகளில், வீடுகளின் வாசல்களுக்கு முன்பே நிறுத்திச் செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவோ அல்லது அவசரத் தேவைகளுக்காகத் தங்கள் வாகனங்களை எடுக்கவோ முடியாமல் தவிக்கின்றனர்.




குறுகிய சாலைகளில் அதிகப்படியான வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை முதல் மாலை வரை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்திருப்பதால், அமைதியான குடியிருப்புப் பகுதியாக இருந்த பனையூர் தற்போது மிகுந்த சத்தமும், நெரிசலும் நிறைந்த பகுதியாக மாறியுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


நிர்வாகிகள் ஆர்வத்துடன் குவிந்து வருவது ஒருபுறம் இருந்தாலும், ஒரு அரசியல் கட்சி தனது பணிகளை மேற்கொள்ளும் போது பொதுமக்களுக்குப் பாதகம் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. விருப்ப மனு அளிக்கும் நிகழ்வு இன்னும் சில நாட்கள் தொடரும் என்பதால், காவல்துறையினர் மற்றும் கட்சித் தலைமை இணைந்து வாகன நிறுத்தத்திற்கு முறையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.