தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள யானை சின்னத்துக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கில் நாளை மறுநாள் (ஜூலை) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
2024ம் ஆண்டு தவெக கட்சியை தவெக தலைவர் விஜய் தொடங்கினார். அதன்பின்னர் தனது கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். விஜய் வெளியிட்ட கட்சிக் கொடியில் இருக்கும் யானை சின்னத்துக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு தொடர்ந்தது. மேலும், அந்த கொடியில் உள்ள யானைச் சின்னத்தை தவெக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலர் இளங்கோவன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதற்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் பகுஜன் சமாஜ் கட்சி கொடிக்கும், தவெக கொடிக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை. பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் உள்ள ஒற்றை யானைக்கும் தவெக கொடியில் உள்ள எக்காலம் ஊதும் இரட்டை யானைக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. தனித்துவத்துடன் தவெக கொடி உருவாக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை குழப்பும் வகையில் உருவாக்கப்படவில்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாளை மறுநாள் வியாழக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டார்.