சரிந்து விழுந்த தவெக 100 அடி கொடிக் கம்பம்.. பதை பதைத்துப் போன மாநாட்டுக் களம்

Su.tha Arivalagan
Aug 20, 2025,05:06 PM IST

மதுரை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நடைபெற உள்ள இடத்தில் கொடிகம்பம் அமைக்கும் பணியின் போது கொடிக்கம்பம் சரிந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


100 அடி உயரம் கொண்ட அந்தக் கொடிக் கம்பத்தை நடும் பணியின்போது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. 


தவெக 2வது மாநில மாநாடு நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஆகஸ்ட் 21ம் தேதியான நாளை மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. விஜய், சாலை மார்க்கமாக நேற்று மாலையே மதுரை வந்து விட்டார். நேற்று மாநாட்டிற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்த போது பேனர் ஒன்று சரிந்து விழுந்ததாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து இன்று கொடிக்கம்பமும் சரிந்து விழுந்துள்ளது.




மாநாட்டு திடலில் 100 அடி உயரத்திற்கு கொடிக் கம்பம் அமைக்கும் பணி இன்று நடைபெற்று வந்தது. கிரேன் மூலம் கம்பம் அமைக்கும் பணி நடந்த போது திடீரென அது சரிந்து விழுந்து, அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்தது. அந்தக் கார் முழுமையாக சிதறிப் போனது. இதனால் அங்கு மாநாட்டு பணிகளில் ஈடுபட்டிருந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் சிதறி ஓடினர். அதிர்ஷ்ட வசமாக காருக்குள்ளும், அதற்கு அருகிலும் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. 


தவெக மாநாடு ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெறும் என்று தான் முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் மாநாட்டிற்கு போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது என போலீசார் தரப்பில் மாநாட்டிற்கு அனுமதி வழங்க தாமதப்படுத்தப்பட்டது. கடைசியாக ஆகஸ்ட் 18 முதல் 22 வரை ஒரு தேதியில் மாநாட்டை நடத்திக் கொள்ள போலீசார் ஆலோசனை வழங்கியதை அடுத்து, ஆகஸ்ட் 21ம் தேதி மாநாடு நடத்தப்படும் என விஜய் அறிவித்தார்.


மாநாடு நடக்கும் நாளில் மதுரையில் மழை பெய்யும் என்று வேறு சொல்லப்படுகிறது. இப்படி அடுத்தடுத்த சிக்கல்கள் மாநாட்டிற்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் தவெக மாநாடு எப்படி நடக்க போகிறது என்பதை பார்க்க அனைத்து தரப்பிலும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.