இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் அரசு ஊழியர்களின் வாக்குகளை தவெக பெருவாரியாகப் பெற்றுள்ளது. குறிப்பாக இளம் அரசு ஊழியர்களின் வாக்குகள் மொத்தமாகவே தவெகவுக்குத்தான் போயுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் பல ஆச்சரியங்களை உள்ளடக்கிய முடிவுகளை கொடுத்துள்ளது. அனலைஸ் செய்யச் செய்ய சுவாரஸ்யமான பல தகவல்களை நாம் பார்க்க முடிகிறது.
குறிப்பாக அரசு ஊழியர்களின் ஆதரவை கிட்டத்தட்ட திமுக இழந்து நிற்கிறது. வழக்கமாக அரசு ஊழியர்களின் வாக்குகள் பெருமளவில் திமுகவுக்குத்தான் போகும். ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான். எம்ஜிஆர் காலத்திலேயே திமுகவுக்குத்தான் அரசு ஊழியர்கள் வாக்களிப்பார்கள். அந்த அளவுக்கு அரசு ஊழியர்களை தன்வசப்படுத்தி வைத்திருந்தது திமுக.
திமுக ஆட்சிக்காலத்தில்தான் அரசு ஊழியர்களுக்குப் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டன என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் இப்படிப்பட்ட வலுவான வாக்கு வங்கியை தற்போது திமுக மெல்ல மெல்ல பறி கொடுத்து வருகிறது.
குறிப்பாக நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவை பெருமளவில் இழந்துள்ளது திமுக. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், காவல்துறையினரும் கூட இந்த முறை வாக்குகளை மாற்றிப் போட்டுள்ளனர்.
பெருமளவிலான ஆதரவை விஜய்யின் தவெக பெற்றுள்ளது. அதிமுகவுக்கும் கணிசமான அளவில் வாக்குகள் மடை மாறியுள்ளன.
புதிய பென்ஷன் திட்டம்தான் அரசு ஊழியர்களின் கடும் அதிருப்திக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. பழைய பென்ஷன் திட்டத்தைக் கொண்டு வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த தேர்தலுக்கு முன்பு உறுதியளித்திருந்தார். ஆனால் கடைசி வரை அதை நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி அரசு ஊழியர்களிடையே நிலவுகிறது. கடைசி நேரத்தில் அவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தார். ஆனாலும் அதுவும் அரசு ஊழியர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. அது டேக் ஆப் ஆகவும் இல்லை.
ஊதிய முரண் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடை நிலை ஆசிரியர்கள் மிகப் பெரிய அளவில் திமுக ஆட்சிக்காலத்தில் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தை திமுக அரசு சரியாக கையாளவில்லை என்ற வருத்தம் ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது. இதுவும் திமுகவுக்கு எதிராக அவர்கள் திரும்ப முக்கியக் காரணம், இடைநிலை ஆசிரியர்கள் பெருமளவில் தவெகவுக்குப் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதை விட முக்கியமாக இளம் அரசு ஊழியர்கள், அதாவது கடந்த 5 ஆண்டுகளில் பணிக்குச் சேர்ந்த அரசு ஊழியர்கள் கிட்டத்தட்ட மொத்தமாகவே தவெகவுக்குத்தான் போட்டுள்ளனர். இவர்கள் எல்லோருமே வயதில் இளையவர்கள். எனவே நேச்சுரலாக விஜய் பக்கம் சாய்ந்துள்ளனர். இவர்களது ஆதரவும், பல தொகுதிகளில் விஜய் கட்சிக்குக் கை கொடுத்துள்ளது.
ஓய்வூதியத் திட்டம்தான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் மிகப் பெரிய அதிருப்திக்குக் காரணம், பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பரிசீலிப்போம் என்று விஜய் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளார். ஒருவேளை அதை நிறைவேற்றினால், அரசு ஊழியர்களின் வாக்குகள் நிரந்தரமாக தவெகவுக்குப் போகும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.