IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
சென்னை: விஜய்யின் தவெக கட்சியில் விருப்ப ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். அவருக்கு தவெக கட்சியில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
2026ம் ஆண்டிற்கான சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தத்தமது அரசியல் கட்சி பணிகளை விறுவிறுப்பாக செய்யத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் தனது கட்சிப்பணிகளையும் விறுவிறுப்பாக செய்து வருகிறார். அதன்படி, இன்று நடிகர் விஜய் தலைமையில் முக்கிய பிரமுகர்கள் தவெக கட்சியில் இணைந்துள்ளனர்.
இது குறித்து தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு மற்றும் செயல் திட்டங்களை மேம்படுத்தும் வகையில் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் Ex IRS அவர்கள், கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்.
இவர், எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு இணங்க, கழகப் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அவர்களது வழிகாட்டுதலின்படி, கழகக் கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டப் பணிகளை மேற்கொள்வார். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழு வீட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மையில் புதிதாக இணைந்தவர்கள் பற்றிய விபரம்:
1. திருமதி ஆர்.ராஜலட்சுமி
முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்
2. திரு. எஸ். டேவிட் செல்வன்
முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்
3. திரு. டாக்டர் ஏ.ஸ்ரீதரன்
திராவிட முற்போக்கு மக்கள் கட்சி நிறுவனர், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்
4. திரு. என். மரிய வில்சன்
நிர்வாக அறங்காவலர், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளை,
தலைவர். ஜேப்பியார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி
5. திரு. சி. சுபாஷ்
முன்னாள் நீதிபதி, தமிழ்நாடு மாநில ஜூடிசியல் சர்வீஸ். சென்னை
கழகத்தில் புதிதாக இணைந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இவர்களுக்கு கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.