ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்: தவெக தலைவர் விஜய்!
சென்னை: ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்கள் வாழ்விலும் ஏற்றம் காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் நாள் என்பது கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் குறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
அறிவு தீபம் ஏற்றி, அறியாமை இருளை நீக்குபவர்கள்;
அனைத்துக் குழந்தைகளுமே வெல்ல வேண்டும் என நினைப்பவர்கள்;
அனைத்துச் சமுதாய மக்களையும் சமமாக பாவித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு சமத்துவ சமுதாயம் படைக்கப் பாடுபடுபவர்கள்;
இவர்கள்தாம் கல்விக் கண் திறந்த எம் கொள்கைத் தலைவர் காமராசர் அவர்களின் கனவுகளை மெய்ப்பித்து வருபவர்கள்;
ஆம், இவர்கள்தாம் நம் ஆசிரியப் பெருமக்கள். இவர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை இந்த ஆசிரியர் தினத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏற்றமிகு தலைமுறையை உருவாக்கி வரும் நம் ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை, கொடுத்த வாக்குறுதியின்படி நிறைவேற்றி, அவர்கள் வாழ்விலும் ஏற்றம் காண வழிவகை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.