தவெக 2வது மாநில மாநாடு.. மதுரையில்.. பந்தக்கால் நட்டாச்சு.. உற்சாகத்தில் விஜய் தொண்டர்கள்!

Su.tha Arivalagan
Jul 16, 2025,11:16 AM IST

மதுரை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துகிறது. இதற்கான பந்தல்கால் நடும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.


நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தனது இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று (ஜூலை 16, 2025) பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.


மதுரையில் நடைபெறவுள்ள இந்த மாநாடு, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. முதல் மாநாடு ஏற்கனவே விக்கிரவாண்டியில் மிகப் பிரமாண்டமாக, வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில், அதன் அதிர்வுகள் இன்னும் கூட உணரப்படும் நிலையில் அதற்குள் அடுத்த மாநாட்டுக்கு தவெக ஆயத்தமாகி விட்டது.




சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன நிலையில், இரண்டாவது மாநாட்டின் மூலம் கட்சியின் பலத்தையும், மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கையும் வெளிப்படுத்த விஜய் தரப்பு முனைப்புடன் உள்ளது.


தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கட்சிக்குள்ள ஆதரவைத் திரட்டி, மாபெரும் மக்கள் கூட்டத்தைக் கூட்டி, தமிழக அரசியல் களத்தில் தங்கள் இருப்பை உறுதிப்படுத்த தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே மதுரையைக் குறி வைத்து களம் இறங்கியுள்ளார் விஜய்.


மாநாட்டில், கட்சியின் முக்கிய கொள்கைகள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்கான அணுகுமுறைகள் குறித்து விஜய் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான உத்திகள் மற்றும் கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்புகள் மாநாட்டில் வெளியாகலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம் என்று அவர் கூறியுள்ளார்.


விஜய்யின் மதுரை மாநாட்டு அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கட்சியினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கட்சி ஆரம்பித்தபோது வடக்கையும், கட்சி தேர்தலை சந்திக்கும்போது தெற்கையும் விஜய் குறி வைத்திருப்பது மொத்தத் தமிழ்நாட்டையும் தன்வசப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.