முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், விஜய் (பெரம்பூர்), நயினார் நாகேந்திரன் வேட்புமனு ஏற்பு
சென்னை : பெரம்பூர் தொகுதியில் தவெக வேட்பாளர் விஜய், சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
அதே சமயம் வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜூனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேட்புமனுக்கள் பரிசீலனை :
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 31ம் தேதி துவங்கி, ஏப்ரல் 06ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தமாக 7150 பேர் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை துவங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கொளத்தூர் தொகுதியில் 4வது முறையாக திமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆதவ் அர்ஜூனா மனு நிறுத்தி வைப்பு :
அதே சமயம் வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜூனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆதவ் அர்ஜூனா தனது மனைவியின் நிறுவனங்கள் குறித்த முழுமையான தகவல்களை தெரிவிக்கவில்லை என்று சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் ஆட்சேபனை தெரிவித்ததால், அவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின் மனு :
இதற்கிடையில் சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. தேர்தல் விதிகளை மீறி அவர் செயல்பட்டதாக அதிமுக சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு பின்னர் ஏற்கப்படதாக தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.