விஜய் பையில் கத்திரிக்கோல்.. ஆதவ் அர்ஜூனாவிடம் மது பாட்டில்.. பரபரத்த சென்னை ஏர்போர்ட்!
சென்னை : கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி சிபிஐ சம்மன் அனுப்பியதால், விசாரணைக்கு ஆஜராவதற்காக தவெக தலைவரும் நடிகருமான விஜய் இன்று டில்லி செல்வதற்காக விமான நிலையம் வந்தார். ஆனால் அவரது கைப்பையில் கத்திரிக்கோல் இருந்ததால் விமானத்தை இறக்க பைலட் மறுத்து விட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல ஆதவ் அர்ஜூனாவின் பையில் மது பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த குளறுபடிகள் காரணமாக விமானம் கிட்டத்தட்ட 40 நிமிடத்திற்கு மேல் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பbர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பல கட்டங்களாக விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களையும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களையும் விசாரித்தனர். பிறகு தவெக நிர்வாகிகள் பலரிடமும், கரூர் மாவட்ட போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த மருத்துவமனை டாக்டர்கள் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
விஜய்யின் பனையூர் அலுவலகத்திற்கு சென்று ஏற்கனவே விசாரித்த அதிகாரிகள், விஜய்யின் பிரச்சார வாகனத்தையும் பறிமுதல் செய்து அதில் இருந்த சிசிடிவி ஆதாரங்கள் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் அடுத்த கட்டமாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பி, அவரை டில்லி சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது. ஜனவரி மாதம் இரண்டு முறை விசாரணைக்கு விஜய் டில்லி அழைப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக மார்ச் 10ம் தேதி ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் மார்ச் 10ம் தேதியன்று தவெக.,வின் வேட்பாளர் நேர்காணலை நடத்த திட்டமிட்டிருந்ததால், அன்று விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும் படி விஜய் தரப்பில் கேட்கப்பட்டது. அதோடு சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதிக்கும் படி கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்க சிபிஐ மறுத்து விட்டது.
மார்ச் 10ம் தேதி விஜய் ஆஜராகததால் மார்ச் 15ம் தேதி அன்று காலை டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து நாளை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவதற்காக இன்று பிற்பகலிலேயே விமானம் மூலம் டில்லி செல்வதற்காக விமான நிலையம் வந்தார்.
அப்போது வழக்கமான பரிசோதனைகள் நடந்தபோது விஜய்யின் பையில் கத்திரிக்கோல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை இயக்க விமானி மறுத்து விட்டார். விஜய்யின் பையில் கத்திரிக்கோல் இருப்பதால் பாதுகாப்பு கருதி, விதிமுறைகளுக்குட்பட்டு விமானத்தை இயக்க முடியாது என்று பைலட் கூறி விட்டார்.
இதையடுத்து தனது பையைப் பரிசோதனைக்கு உட்படுத்த விமானத்திலிருந்து விஜய் இறங்கிச் சென்றார். அதன் பின்னர் பையை பரிசோதனைக்குக் கொடுத்து விட்டு தனி விமானத்தில் அவர் மட்டும் அமர்ந்திருந்தார். மறுபக்கம், விஜய்யுடன் பயணிக்க வந்திருந்த அர்ஜூன் ஆதவின் கைப்பையைப் பரிசோதித்தபோது அதில் மது பாட்டில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதுவும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தக் குழப்பங்கள் காரணமாக கிட்டத்தட்ட 40 நிமிடம் தாமதமாக விமானம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றது.
இதுவரை இல்லாத அளவுக்கு விஜய்யின் இந்தப் பயணத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் பரபரப்பை கிளப்பியுள்ளன.