விஜய்க்கு நீதிபதி கொடுத்த 2 ஆப்ஷன்... அடுத்து என்ன செய்ய போகிறார்?
சென்னை : புலி படத்தில் தான் ரொக்கமாக பெற்ற சம்பள தொகையை மறைத்து, அதற்கு வரி செலுத்த அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, வருமான வரித்துறை அபராதம் விதித்தது சரி என உத்தரவிடப்பட்டது.
2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படத்திற்காக விஜய் பெற்ற சம்பளத்தில் சுமார் ரூ.5 கோடி ரொக்கமாக வழங்கப்பட்டதாகவும், அந்தத் தொகை கணக்கில் காட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சோதனையின் போது தான் இது தெரிய வந்ததால், வருமான வரிச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டதாகத் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதத்தை எதிர்த்து விஜய் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அபராதம் விதிக்கத் துறைக்கு அதிகாரம் இருக்கலாம், ஆனால் அது விதிக்கப்பட்ட கால அளவு சட்ட ரீதியாகத் தவறானது என்று அவர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த அபராதம் ஜூன் 30, 2019-க்குள் விதிக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் ஜூன் 30, 2022 அன்றுதான் விதிக்கப்பட்டது. காலதாமதமாக விதிக்கப்பட்ட இந்த அபராதம் சட்டப்படி செல்லாது என்பது விஜய்யின் தரப்பு வாதம். இருப்பினும், வருமான வரித்துறை இதை மறுத்துள்ளது. நடைமுறைத் தவறுகள் ஏதும் நடக்கவில்லை என்றும், சட்ட விதிகளின்படியே அபராதம் விதிக்கப்பட்டதாகவும் துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் விஜய்யின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், வரிக்கான அபராதத்தை செலுத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதாகவும் மீடியாக்களில் செய்தி பரவியது. ஆனால் விஜய்யின் மனுவை ஒரேயடியாக நீதிபதிகள் தள்ளுபடி செய்யாமல் அவருக்கு 2 ஆப்ஷன்களை வழங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் செந்தில்குமார் இராமமூர்த்தி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 2022-ம் ஆண்டு தாக்கல் செய்த ரிட் மனு-வை சரியான கால வரம்பிற்குள் (limitation period) வருமான வரித்துறை செயல்படவில்லை என்கிற வாதத்தை மட்டுமே ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்துள்ளார். மனுதாரரின் மற்ற வாதங்களை எல்லாம் வருமான வரித்துறையின் மேல்முறையீடு அதிகாரி முன் வைத்து கொள்ளலாம் என மனுதாரருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
ஆகையால், மனுதாரர் முன் தற்போது இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அவர் வருமான வரித்துறையின் மேல்முறையீடு அதிகாரியிடம் செல்லலாம் அல்லது தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் ரிட் அப்பீல் மனு தாக்கல் செய்யலாம்.இந்த இரண்டு வாய்ப்புகளில் விஜய் எதை தேர்வு செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.