பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்? - தமிழக அரசிற்கு விஜய் சரமாரி கேள்வி
சென்னை: தமிழகத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். "பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்?" என அவர் தமிழக அரசை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரங்கள் :
விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. அதேபோல், மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் தவித்த நிகழ்வையும் விஜய் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய சம்பவங்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சாதாரண மக்கள் மட்டுமன்றி, அரசியல் பிரமுகர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதற்குச் சான்றாக, திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் மற்றும் அக்கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வருக்கு நேரடி கேள்வி :
"பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லை, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. இப்படித் தமிழகத்தில் எங்குமே பாதுகாப்பு என்பது இல்லாத நிலை உருவாகியுள்ளது" என்று கவலை தெரிவித்துள்ள விஜய், இதையெல்லாம் பார்த்துக் கொண்டு முதலமைச்சர் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். "கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தைச் செலுத்தி வரும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்?" என கேட்டுள்ளார்.
தேர்தல் கூட்டணி மற்றும் அரசியல் கணக்குகளில் காட்டும் ஆர்வத்தை, மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதிலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதிலும் தமிழக அரசு காட்ட வேண்டும் என்பதே தவெக தலைவரின் பிரதான கோரிக்கையாக உள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அவரது இந்த அறிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.