காரைக்குடியில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்...ஸ்தம்பித்த சாலைகள்
காரைக்குடி : தவெக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக காரைக்குடி சென்ற அக்கட்சியின் தலைவர் விஜய், திடீரென சாலையில் இறங்கி, மக்களுக்கு நடுவே சைக்கிள் ஓட்டிச் சென்றார்.
காரைக்குடியில் தவெக வேட்பாளர் பிரபுவை ஆதரித்து இன்று ஓட்டு சேகரிக்கிறார் தவெக தலைவர் விஜய். இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை எதிர்த்து, தவெக வேட்பாளர் பிரபு போட்டியிடுகிறார். இந்நிலையில் அந்த தொகுதியில் இன்று விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக திறந்த வாகனத்தில் ரோடுஷோ நடத்தியபடி விஜய் வந்து கொண்டிருந்தார். திறந்த பிரச்சார வாகனத்தில் இருந்த படி சாலையில் இரு பக்கங்களிலும் நின்று கொண்டிருந்த மக்களை பார்த்து பயணித்தார் விஜய்.
திடீரென பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி, சைக்கிளில் பயணிக்க துவங்கினார். இதனால் அதிக அளவிலான ரசிகர்களும், தொண்டர்களும் விஜய்யை சூழ்ந்து கொண்டனர். பெருத்த கூட்டத்திற்கு நடுவே விஜய் சிரமப்பட்டு சைக்கிளை இயக்கினார். ஒரு கட்டத்தில் தடுமாறி கீழே விழப் போன விஜய்யை, பவுன்சர் ஒருவர் தாங்கிப் பிடித்தார். கூட்டம் அதிகமானதால் மீண்டும் பிரச்சார வாகனத்தில் ஏறி பயணம் செய்ய துவங்கினார் விஜய்.
காரைக்குடியில் பிரச்சாரம் செய்வதற்கு பகல் 02.30 மணி வரையில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி வந்ததால் அவர் காரைக்குடி திடலுக்கு வந்து சேருவதற்கே தாமதமானது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் விஜய் திடலை அடைய முடியாத நிலை ஏற்பட்டதால், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து வந்ததால் அவருக்கு பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. விஜய் பேசாமல் சென்றதால் அவரது பேச்சை கேட்க பல மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். விஜய்யை பார்ப்பதற்காக காலை முதலே கொளுத்தும் வெயிலில் பல மணி நேரம் காத்திருந்தனர்.
விஜய்யின் சைக்கிள் பயணம், பிரச்சார பயணத்தால் காரைக்குடி நகரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விஜய் செல்லும் இடங்கள் அனைத்திலும் அதிக அளவிலான மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அவருக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு போலீசார் சிரமப்பட்டு வருகின்றனர்.