சேலத்தில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு...காரணம் இது தானா?
சேலம் : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி சேலத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றத் திட்டமிட்டுள்ளார். இதற்கான அனுமதியைப் பெறுவதற்காக அக்கட்சியின் நிர்வாகிகள் காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர். ஆனால் இந்த கூட்டத்திற்கு அனுமதி தர போலீசார் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் தொடர்பான வேலைகளில் தவெக தீவிரம் காட்ட துவங்கி உள்ளது. வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க இணையதளம் என பலவிதமான வேலைகளை செய்து வரும் நிலையில், விஜய் மீண்டும் தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை திட்டமிட்டுள்ளார். ஈரோட்டை தொடர்ந்து அடுத்த படியாக சேலத்தில் மக்களை விஜய் சந்திக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சேலம் மாநகரப் பகுதியில் உள்ள சீலநாயக்கன்பட்டி அல்லது மாவட்டத்தின் மற்றொரு இடம் என இரண்டு இடங்களை நிர்வாகிகள் பரிந்துரைத்துள்ளனர். இதில் ஏதேனும் ஒரு இடத்தில் கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் விஜய் தனது பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே உரையாற்ற உள்ளார்.இக்கூட்டத்தில் சுமார் 11,000 கட்சி நிர்வாகிகள் மற்றும் 24,000 பொதுமக்கள் என மொத்தம் 35,000 பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இக்கூட்டத்திற்கு வரவேண்டாம் என்று மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் மனு அளிக்கப்பட்டது. ஏற்கனவே 2025ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சேலத்தில் நடைபெறவிருந்த இக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் புதிய தேதியில் அனுமதி கோரி இந்த மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க கூடுதல் தகவல்கள் தேவை எனக் கூறி பிப்ரவரி 13ம் தேதி விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு விறுவிறுப்படைய துவங்கி உள்ளது. சமீபத்தில் தான் இது தொடர்பாக டில்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகி விளக்கம் அளித்து விட்டு வந்தார். இதனால் சேலம் மக்கள் சந்திப்பு நிழகச்சிக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.