உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குபதியப்பட்ட 9 சட்டப் பிரிவுகள் எவை? ஜாமீன் கிடைக்குமா?
சென்னை : தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் கைதை கண்டித்து திமுக.,வினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக தவெக.,வினரும் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு புறம் உதயநிதி ஸ்டாலினின் கைதை வரவேற்று தவெக.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் கைதுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி சென்னை ஐகோர்ட்டில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அவசர மனு, விசாரணைக்கு வந்துள்ளது. இதற்கிடையில் போலீசார் தரப்பில் உதயநிதி மீது எந்தெந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்ற விபரங்கள் வெளியாகி உள்ளன.
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள்:
பிரிவு 196: இரு வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை தூண்டுதல்.
பிரிவு 192: சமூகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டும் என்றே பிறரைத் தூண்டுதல்.
பிரிவு 61: குற்றச் சதியில் ஈடுபடுதல் .
பிரிவு 351(2): குற்றவியல் மிரட்டல் விடுப்பது தொடர்பான பிரிவு.
பிரிவு 296(B): பொதுவெளியில் ஆபாசமான வார்த்தைகளைப் பேசுவது அல்லது பயன்படுத்துவது.
பிரிவு 352: அமைதியைக் குலைக்கும் நோக்கில் வேண்டும் என்றே மற்றவர்களை அவமதித்தல்.
பிரிவு 79: ஒரு பெண்ணின் மானத்தை அல்லது கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் வார்த்தை, சைகை அல்லது செயல்களில் ஈடுபடுதல்.
பிரிவு 4: பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் .
பிரிவு 67: இணையதளம் அல்லது மின்னணு வழியில் ஆபாசமான உள்ளடக்கங்களைப் பரப்புதல்.
இரு குழுக்கள் இடையே பகையை தூண்டுதல், குற்றச் சதி, மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் உதயநிதிக்கு ஜாமின் கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உதயநிதியை போலீசார் கைது செய்து தஞ்சை அழைத்துச் சென்று கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.