"தமிழ்நாடு தாங்காது CM Sir!".. முதல்வருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய உதயநிதி

Su.tha Arivalagan
May 29, 2026,06:12 PM IST

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளை மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.


சமீபத்தில் கடலூர் மாவட்டத்தில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளதுடன், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


இந்தக் கொலைச் சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "தமிழகத்தில் இப்படித் தொடர்ச்சியாகக் குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருவதைப் பார்க்கும் போது, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா இல்லையா என்ற பலத்த சந்தேகம் மக்களுக்கு எழுகிறது" என்று வேதனை தெரிவித்துள்ளார்.


"தேர்தல் பஞ்ச் டயலாக் எங்கே போனது?" 




முதலமைச்சரின் கடந்தகால தேர்தல் பிரச்சாரங்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய உதயநிதி ஸ்டாலின், தற்போதைய அரசின் மந்தமான போக்கைக் கடுமையாகச் சாடினார். அவர் முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டுகள்:


விமர்சனம்: தேர்தல் பிரச்சாரக் களங்களில் கைகளில் பக்கம்பக்கமாகப் பேப்பர்களை வைத்துக் கொண்டு, சட்டம் ஒழுங்கு குறித்து வாய்கிழியப் 'பஞ்ச் டயலாக்' பேசியவர், இன்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்ததும் 'Deep Sleep Mode'-க்கு சென்றுவிட்டார்.


பெண்கள் பாதுகாப்பிற்காகப் பெரும் விளம்பரத்துடன் அறிவிக்கப்பட்ட 'சிங்கப்பெண்கள் படை' திட்டத்தின் தொடக்க விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்தத் தொடக்க விழாவை அரசு தற்காலிகமாகத் தள்ளி வைத்துள்ளதா, அல்லது அந்தப் பாதுகாப்பு முயற்சியையே ஒட்டுமொத்தமாகக் கைவிட்டுவிட்டதா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 'சிங்கப்பெண் படை' எனப் பெயரையும் சீருடையையும் (Uniform) மாற்றுவது மட்டும் தான் இந்த அரசின் மாற்றமா? அல்லது சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இன்னும் உங்களுக்குக் கால அவகாசம் தேவையா?


"கற்றுக் கொள்ளும் வரை தமிழ்நாடு தாங்காது"


தமிழகத்தின் தற்போதைய பாதுகாப்புச் சூழல் கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் நிர்வாகத்தைக் கற்றுக்கொள்வதற்குள் மாநிலத்தின் நிலைமை மோசமாகிவிடும் என்று எச்சரித்துள்ளார்.


"நீங்கள் பொறுமையாக நேரமெடுத்து, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றக் கற்றுக்கொள்ளும் வரை, தமிழ்நாடும் தமிழக மக்களும் தாங்க மாட்டார்கள் CM Sir!" என்று தனது கண்டனத்தை அவர் பதிவு செய்துள்ளார்.


அடுத்தடுத்து நடக்கும் குற்றச் சம்பவங்களும், பாதுகாப்புத் திட்டங்களின் தாமதமும் தற்போதைய தமிழக அரசுக்கு அரசியல் ரீதியாகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.