முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!

Meenakshi
Nov 08, 2025,05:18 PM IST

சென்னை: திமுக தலைவர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் வருவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் திமுகவின் 75வது ஆண்டு விழாவில் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அறிவை மையமாக கொண்டு அறிவொளி பரப்பி வரும் திமுக.,வின் 75வது ஆண்டு விழாவிற்கு உதயநிதி அறிவுத் திருவிழா என பெயர் வைத்துள்ளது மிகவும் பொறுத்தமானது. ஏதோ கட்சியை துவங்கினோம், அடுத்த முதல்வர் நான் தான் என அறிவித்து நாம் ஆட்சிக்கு வரவில்லை. திமுக.,வின் தலைவர் முதல் கடைக்கோடி தொண்டர்கள் வரை சுற்றி, சுழன்று பணியாற்றினார்கள். 18 ஆண்டுகள் கடுமையாக உழைத்தார்கள்.எத்தனை போராட்டங்கள், எத்தனை சவால்கள், எத்தனை தியாகங்கள் செய்தது திமுக.




திமுக பெற்ற வெற்றி என்பது யாரும் படைக்க முடியாத வரலாற்று சாதனை. இந்த வரலாறு பற்றி தெரியாத சிலர் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள். இன்னும் சில அறிவிலிகள் திமுக.,வை போலவே வெற்றி பெறுவோம் என பகல் கனவு காண்கிறார்கள். திமுக.,வை போல் வெற்றி பெற திமுக.,வை போல் உழைப்பும் அறிவும் தேவை என்று பேசியிருந்தார். அதனைத்தொடர்ந்து  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசுகையில், நானே வியக்கும் அளவுக்கும், சல்யூட் அடிக்கும் அளவுக்கு திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பணிகளை ஆற்றுவதைப் பார்க்கும் போது பெருமைப்படுகிறேன். காரணம் அவர் கலைஞரிடம் கற்றவர், பணியாற்றியவர். அதேபோல உதயநிதியும் அந்த இடத்துக்கு நிச்சயமாக ஒரு காலத்தில் வருவார்.


அப்படி வருகின்ற பொழுது தலைவர் பெற்ற பேரும் புகழையும் விட, ஏன் உட்கார்ந்து இருக்கும் தளபதி அவர்கள் பெருகின்ற பேரும் புகழையும் விட அதிகமான அளவில் பெரும் புகழும் பெறக்கூடியவர் தம்பி உதயநிதி. நம்முடைய உதயநிதி அடுத்தாக நம்முடைய கட்சியை பார்த்துக்கொள்ளும் நிலையில் இருக்கிறார் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.