My Proud Mother: சோர்வடையும் போதெல்லாம் தூக்கி விடும் உற்சாக பூஸ்டர்.. என் அம்மா!

Su.tha Arivalagan
May 10, 2026,04:56 PM IST

- உமாராணி சங்கரலிங்கம்


ஐந்து பெண்களைப் பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பதை மாற்றி 5 பெண்களோடு, 9 மகன்களையும் பெற்ற வீரத் தாய், தந்தைக்கு ஐந்தாவதாகப் பிறந்த மங்கையர்க்கரசி தான் என் அம்மா. 


கூடப்பிறந்த அனைவருக்கும் பிடித்தவர்கள் தான் என் அம்மா. தன் சிறு தம்பிகளைக் கவனித்துக் கொள்வதற்காக 9வது படிக்கும் போதே பள்ளியிலிருந்து படிப்பை நிறுத்தி விட்டனர்.(அவர்களின் அந்தப் படிப்புத் தாகத்தை எனக்குள் விதைத்து விட்டார்களே). தையல் கலையில் மிகச் சிறந்தவர்கள்.


பாசமலர் சிவாஜியும் , சாவித்திரியும் போல எங்கள் பெரிய மாமாவும், அம்மாவும். ஆனால் மாமா திருமணத்திற்கு பிறகு மாறி விட்டார்கள் என்பதை (மாமா தற்போது இல்லை) இன்னமும் சொல்லி அவர் மகனிடம் தன் பாசத்தைக் கொட்டும் அன்புத் திலகம். 


16 வயதிலேயே திருமணம் . திருமணத்திற்குப் பிறகு என் தந்தை வேலை நிமித்தம் வெளியூரில் இருக்க தனது 30 வயதிலிருந்து என்னையும், தன் இரு மகன்களையும், மாமியாரையும் ,தோட்டங்களையும், மாடுகளையும்  கவனிக்க  அயராது உழைத்தவர் தான் என் அம்மா.




பள்ளி,கல்லுாரியில் நான் படிக்கும் காலத்தில் மிகமிகக் கண்டிப்பானவர்.  அந்தக் கண்டிப்பும்,கட்டுப்பாடும் எனக்கு அப்போது வெறுப்பை ஏற்படுத்தியது. ஆனால் எனக்கு திருமணம் முடிந்து பெண்ணைப் பெற்று வளர்க்கும்போது தான் எனக்குப் புரிதல் ஏற்பட்டு என் அம்மாவிடம் மிக நெருங்கிப் பழகி (மன்னிப்பும் கேட்டு) புரிந்தும் கொண்டேன். என் அம்மா தன் செயல் மூலம் எனக்கு சொல்லாமல் செய்து காட்டியது" எப்பொழுதும் நாம் நம் குழந்தைகளப் பற்றி பெருமையாகக் கூறக்கூடாது. மற்றவர்கள் தான் நம்மிடம் கூற வேண்டும்.".


தைரியத்தின் மறு உருவம் என் தாய். தந்தை, தம்பிகள் தளர்ந்திருந்த நேரத்திலும் தன் பேச்சால் அவர்களை உற்சாகப்படுத்துபவர். என்னை எனக்கேப் புரிய வைத்தவர். எப்போதும் நேர்மறையான எண்ணங்களைக்  கொண்டவர்.


84 வயதான அந்தக் குழந்தைக்கு இப்போது நான் ஒரு சிறந்த தோழி. தினமும் வீட்டில் நடக்கும் அனைத்தையும்  கொட்டித் தீர்த்து என்னிடம் ஆலோசனைக் கேட்டு அப்பாடா எனக்கூறி அவர்கள் சாய ஒரு தோளாக உள்ளேன் நான். வயதான பருவத்தில் அம்மா, அப்பா இருவரும் சண்டை போட்டாலும் ,சமாதானம் ஆனாலும் ஒருவரையொருவர் புரிந்து  விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கை தான் எங்களுக்குப் பாடம். நான் சோர்வடையும் நேரங்களில் எல்லாம் என்னைத் தூக்கி விடுபவர்கள்.


என்னைப் பெற்ற தாய் மங்கையர்க்கரசி.

ஆனால் யசோதைகளாய் என்னை வளர்த்த, வளர்க்கும் தாய்கள். 

என் பாட்டிகள். காசியம்மாள், ரத்தினத்தாயம்மாள்.

என் சித்தி சுதந்திர தேவி.

என் அத்தை லக்ஷ்மித்தாய்.

ஆன்மீகத் தாய்கள்.

சிந்தாமணி பெரியம்மா.

சம்பத்குமாரி அம்மா.

மரகதம் அம்மா (hyd).

ஜெயாபாலு அம்மா.

மற்றும் நான் பெற்ற இரு குழந்தைகள் அக்ஷ்யா அருண்சந்த், அனு ரத்தினாதேவி விவேக்.


இறைவன் அருளால் இவர்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடனும்,மன நிம்மதியோடும், சந்தோஷமாக வாழப் பிரார்த்திக்கிறேன். 


இப்படிக்கு

அம்முக்குட்டி (அம்மா என்னை இப்பொழுதும்  இப்படித் தான் கூப்பிடுவார்கள்)


(உமாராணி சங்கரலிங்கம், யோகா முத்ரா பயிற்சியாளர், மன உளவியலாளர்)