டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
சென்னை: டிசம்பர் 15ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் அரசியல் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போதை நிலையை வைத்து பார்க்கும் போது தமிழகத்தில் நான்கு முனை போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பிற கட்சிகள் கூட்டணி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகம் வருகிறார் அமித்ஷா. டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக சென்னை வரும் அமித்ஷா, அங்கிருந்து வேலூருக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.
அதன்பின்னர் கூட்டணி விவகாரம், தேர்தல் பணிகள் குறித்து பாஜக மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நேற்று திடீர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு நடைபெற்றது. சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தற்போதைய பரபரப்பான அரசியல் சூழலில் அமித்ஷாவின் தமிழக வருகை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.