கொரோனா பரவலை தடுக்க முக கவசம் கட்டாயம் இல்லை: மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ்!

Meenakshi
May 27, 2025,02:01 PM IST

டெல்லி: கொரோனா தொற்று தற்போது அதிகமாக பரவி வரும் நிலையில், முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை இ்ணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் வசதி போன்ற வசதிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் 257 தொற்று இருந்த நிலையில் தற்போது 1009 ஆகி உயர்ந்துள்ளது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில்,  முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை இ்ணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.




சர்வதேச யோகா தின விழா ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.  அதன் 25 நாள் முன்னோட்ட நிகழ்ச்சி மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்த விழாவினை மத்திய ஆயுஷ் மற்றும் சுகாதாரத்துறை அமையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் , துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலைச்சர் ரங்கசாமி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.


அதன்பின்னர் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில்,  உலக அளவில் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு மிகப்பெரிய பங்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்டு என்று தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் பேசுகையில், கொரோனா பரவல் தடுப்பிற்கான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு செய்துள்ளது. மேலும் தற்போதைய சூழ்நிலையில் முக கவசம் கட்டாயமில்லை. கொரோனா தொற்றை பொருத்து அந்தந்த மாநிலங்களும் அவர்களது மாநிலத்திற்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.