என்ன எழுதிருக்கீங்க?.. விசா கோரும் மாணவர்களிடம் சோசியல் மீடியா விவரம் கேட்கும் அமெரிக்கா!
வாஷிங்டன்: அமெரிக்காவில் படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்கள் இனி தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களை பகிர வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை புதன்கிழமை மீண்டும் மாணவர் விசா பெறும் நடைமுறையைத் தொடங்கியுள்ளது. அதேசமயம், புதிய மாணவர் விசா வழிகாட்டுதல்களையும் அது வெளியிட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவின் படிக்க விரும்பும் மாணவர்கள், தங்களது விண்ணப்பத்தில், தங்களது சமூக வலைதளப் பக்கங்கள் குறித்த விவரங்களையும் இணைக்க வேண்டும்.
இதன் மூலம், அமெரிக்காவிற்கு எதிரான கருத்துகள் அவர்களது பக்கங்களில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய முடியும். இந்த புதிய சமூக வலைத்தள வழிகாட்டுதல்களை உருவாக்கும் வரை, கடந்த மே மாத இறுதியில் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா வழங்குவதை வெளியுறவுத் துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இனி, மீண்டும் விண்ணப்பங்களைப் பெறத் தொடங்கி, சந்திப்புகள் நடைபெறும்.
சமூக வலைத்தளங்களை மேம்படுத்தப்பட்ட முறையில் பரிசோதிப்பதன் மூலம், எங்கள் நாட்டிற்கு வர முயற்சிக்கும் ஒவ்வொருவரையும் நாங்கள் முறையாகச் சரிபார்க்கிறோம் என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தங்களது நாட்டுக்கு எதிரான கருத்துக்களுடன் யாரும் உள்ளே வந்து விடக் கூடாது என்பதே இந்த புதிய கட்டுப்பாட்டின் நோக்கமாக கருதப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம், வெளிநாட்டு மாணவர் விண்ணப்பதாரர்களின் சமூக வலைத்தளப் பக்கங்கள் "யூத எதிர்ப்புச் செயல்பாடு" (antisemitic activity) குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், இது விசா மறுப்புக்கு வழிவகுக்கும் என்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்தது. அமெரிக்காவுக்குக் குடியேற அல்லது கிரீன் கார்டு பெற முயற்சிக்கும் நபர்களின் சமூக வலைத்தளப் பக்கங்களை அமெரிக்க அரசு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சரிபார்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.