அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையில் இடியை இறக்கிய வாஷிங்டன் கோர்ட்.. வரி விதிப்பு செல்லாது!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த உலகளாவிய வரிகள் சட்டவிரோதமானது என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது டிரம்பின் வர்த்தக கொள்கைக்கு ஒரு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
IEEPA சட்டத்தின் கீழ் டிரம்ப் இந்த வரிகளை விதித்தார். ஆனால், இந்த சட்டம் அவருக்கு அந்த அதிகாரத்தை வழங்கவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. டிரம்ப் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவகாசம் அளிக்கும் வகையில் தீர்ப்பு அக்டோபர் 14ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை டிரம்ப் விமர்சித்துள்ளார். தீர்ப்பை எதிர்த்து நாங்கள் அப்பீல் செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தீர்ப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது. இறுதியில் அமெரிக்கா வெற்றி பெறும். வரிகளை நீக்கினால், அது அமெரிக்காவிற்கு ஒரு பேரழிவு. இது அமெரிக்க உற்பத்தியாளர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த முடிவு உறுதி செய்யப்பட்டால், அமெரிக்காவையே அழித்துவிடும். நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், பெரிய பற்றாக்குறைகள் மற்றும் பிற நாடுகள் விதிக்கும் தடைகளிலிருந்து நாட்டைப் பாதுகாக்க வரிகள் அவசியம்.
அனைத்து வரிகளும் இன்னும் அமலில் உள்ளன. உச்சநீதிமன்றம் தலையிட்டு அவற்றை நிலைநிறுத்தும். கடந்த கால அரசியல்வாதிகள் அமெரிக்காவை வர்த்தகத்தின் மூலம் சுரண்ட அனுமதித்து விட்டனர் என்று கூறியுள்ளார் டிரம்ப்.
IEEPA என்றால் என்ன?
IEEPA என்பது International Emergency Economic Powers Act என்பதன் சுருக்கம். நாட்டில் தேசிய அவசர நிலை ஏற்பட்டால் பொருளாதார தடைகள் மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகள் விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு சட்டம். இந்த சட்டத்தை பயன்படுத்தி தான் டிரம்ப் பல நாடுகளுக்கு எதிராக வரிகளை விதித்து வருகிறார். இந்தியாவுக்கும் கூட 50 சதவீத வரி விதிப்பை அறிவித்துள்ளார்.
இந்த வரி விதிப்பு மூலம் உலக நாடுகளை மிரட்டி தனது வழிக்கு கொண்டு வர முயன்று வருகிறார் டிரம்ப் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சட்டம் டிரம்ப்புக்கு அந்த அதிகாரத்தை வழங்கவில்லை என்று இப்போது கூறியுள்ளது.
இந்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால், டிரம்ப் விதித்த அனைத்து வரிகளும் ரத்து செய்யப்படும். இது அமெரிக்காவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். அமெரிக்க நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு குறைந்த விலை கொடுக்க வேண்டி இருக்கும். அதே நேரத்தில், அமெரிக்க பொருட்கள் வெளிநாடுகளில் அதிக போட்டி போட வேண்டி இருக்கும்.