அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச்சூடு.. பலர் படுகாயம்

Su.tha Arivalagan
May 26, 2025,10:06 AM IST

லிட்டில் ரிவர், தெற்கு கரோலினா: அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில், லிட்டில் ரிவர் பகுதியில் நிகழ்ந்த பயங்கர துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் சகஜமானவை. சரமாரியாக நடைபெற்று வரும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகின்றன. 


இந்த நிலையில், லிட்டில் ரிவர் கடற்கரை நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9:30 மணியளவில் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. ஹாரி கவுண்டி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முதற்கட்ட தகவல்களின்படி, குறைந்தது 11 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் நிலை குறித்த முழுமையான விவரங்களை காவல்துறை வெளியிடவில்லை.





சம்பவம் நடந்த இடத்தில் இருந்து, பலர் சொந்த வாகனங்கள் மூலமாகவும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஹாரி கவுண்டி காவல்துறை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவர்கள் மற்றும் இதன் பின்னணி குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தத் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் குடியிருப்புகள் உள்ளன. சில வணிக நிறுவனங்களும் அங்கு உள்ளன. படகுத் துறையும் அருகிலேயே உள்ளது. சம்பவ இடத்திலிருந்து வெளியான காணொளிகளில், ஏராளமான காவல்துறை வாகனங்களும், ஆம்புலன்ஸ்களும் அப்பகுதிக்கு விரைந்த காட்சி பதிவாகியுள்ளது.

லிட்டில் ரிவர், மிர்டில் கடற்கரையிலிருந்து வடகிழக்கே சுமார் 32 கிலோமீட்டர் (20 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.