ஏர் இந்தியா விமானத்தின் எரிபொருள் சப்ளையை கேப்டன்தான் துண்டித்தார்.. அமெரிக்க ஊடகம் தகவல்

Su.tha Arivalagan
Jul 17, 2025,05:37 PM IST

வாஷிங்டன்: கடந்த மாதம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் விமானிகள் இருவருக்கும் இடையே நடந்த கடைசி உரையாடல் அடங்கிய காக்பிட் பதிவுகளை ஆய்வு செய்ததில், விமானத்தின் கேப்டன்தான் எரிபொருள் சப்ளையை நிறுத்தியதாக அமெரிக்க ஊடகமான வால்ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.


வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்தியில், போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தை இயக்கிய கேப்டன் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே எரிபொருளை கட் ஆப் நிலைக்குக் கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து விமானத்தை இயக்கிய முதல் அதிகாரி (First Officer), இதற்கான காரணத்தைக் கேட்டுள்ளார்.  ஆனால் கேப்டன் அதற்குப் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்ததாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.


விபத்தில் சிக்கிய விமானத்தை இயக்கிய விமானிகள், கேப்டன் சுமீத் சப்ஹர்வால் மற்றும் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் ஆவர். இருவருமே நல்ல அனுபவம் மிக்கிவர்கள். இவர்களின் மொத்த விமான அனுபவம் முறையே 15,638 மணிநேரம் மற்றும் 3,403 மணிநேரம் ஆகும். இந்த விமான விபத்தில் ஒரு பயணி மட்டுமே உயிர் பிழைத்தார்.


வால்ஸ்ட்ரீட் ஜர்னல் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது: 




விமான விபத்து விசாரணை பணியகத்தின் (AIIB) ஆரம்ப அறிக்கையை ஆராயும்போது, விமானம் புறப்பட்ட சில நொடிகளில், சுமார் ஒரு வினாடி இடைவெளியில், இரு என்ஜின்களுக்கான எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகளும் ஒன்றன்பின் ஒன்றாக "கட்ஆஃப்" நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்டதற்கும் விபத்துக்கும் இடையிலான நேரம் வெறும் 32 வினாடிகள் மட்டுமே.


கேப்டன் தான் சுவிட்சுகளை அணைத்துள்ளார் என்பதை ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. சுவிட்சுகள் தற்செயலாக அணைக்கப்பட்டதா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்று அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவிக்கிறது அந்த செய்தி.


இதற்கிடையே, விமான விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது வெளியாகியிருப்பது முதல் கட்ட விசாரணை அறிக்கைதான். இறுதி அறிக்கை வரும் வரை எந்த முடிவுக்கும் நாம் போகக் கூடாது என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு கடந்த வாரம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.