கடலில் விழுந்து மூழ்கிய.. பல கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க போர் விமானம்.. 2 வீரர்கள் மீட்பு!
சான்டியாகோ: அமெரிக்க போர் விமானம் ஒன்று திடீரென கடலில் விழுந்து மூழ்கியது. அந்த விமானத்தில் இருந்த 2 வீரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடலில் மூழ்கிய போர் விமானம் பல கோடி ரூபாய் மதிப்பிலானது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ஹாரி எஸ். ட்ரூமன் விமானம் தாங்கி கப்பலில் இருந்து பல மில்லியன் டாலர் மதிப்புள்ள போர் விமானம் ஒன்று திங்களன்று சான்டியாகோ பகுதியில் கடலில் விழுந்தது. இந்த விபத்தில் போர் விமானத்தில் இருந்த இரு வீரர்களும் சிக்கிக் கொண்டனர். இருப்பினும் அவர்களை மீட்புப் படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். இருவரில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இரு வீரர்களும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
விமானத்தை இழுத்துச் சென்ற டிராக்டரும் கடலில் விழுந்தது. 2021ம் ஆண்டு தயாரிப்பான இந்த போர் விமானத்தின் விலை 67 மில்லியன் டாலர் ஆகும். விமானத்தை இழுத்துச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்தது என்று கடற்படை தெரிவித்துள்ளது. "விமானத்தை நகர்த்தும் குழு கட்டுப்பாட்டை இழந்ததால் விமானம் மற்றும் டிராக்டர் கடலில் விழுந்தன" என்று கடற்படை கூறியுள்ளது.
விமானம் கடலில் விழுவதற்கு முன்பு, அதை இழுத்துச் சென்ற கடற்படை வீரர்கள் உடனடியாக செயல்பட்டு பாதுகாப்பாக விலகினர். இதனால், ஒரு வீரருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. மற்ற அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். கப்பல் மற்றும் மற்ற விமானங்கள் தொடர்ந்து செயல்படும். இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. மீட்புப் பணிகள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ட்ரூமன் கப்பலில் இருந்து ஆறு மாதங்களில் போர் விமானம் விபத்துக்குள்ளாவது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு, USS கெட்டிஸ்பர்க் ஏவுகணை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதில் ஒரு விமானம் சேதமடைந்தது. அந்த விபத்தில் விமானிகள் உயிர் தப்பினர். ட்ரூமன் கப்பல், மத்திய கிழக்கில் செயல்படும் இரண்டு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களில் ஒன்றாகும். இப்பகுதியில் உள்ள கப்பல்களுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தலாக இருப்பதால், அவர்களை அமெரிக்கப் படைகள் தாக்கி வருகின்றன.