6 வருடங்களுக்குப் பிறகு.. அமெரிக்க அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் face to face meeting!
புசான் (தென்கொரியா): அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக தென் கொரியாவில் நடந்த APEC மாநாட்டின்போது வியாழக்கிழமை நேரில் சந்தித்தனர்.
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே பல மாதங்களாக நீடித்து வந்த வர்த்தகப் பதற்றங்களைத் தணித்து, ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
இந்த சந்திப்புக்குப் பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், நாங்கள் ஒருவரையொருவர் நன்கு அறிவோம், எங்களுக்கு ஒரு சிறந்த உறவு உள்ளது. நாங்கள் ஒரு மிக வெற்றிகரமான சந்திப்பைக் கொண்டிருப்போம். நாங்கள் இன்று ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம். அவர் (ஜி ஜின்பிங்) ஒரு மிகக் கடினமான பேச்சுவார்த்தையாளர். எனது நண்பரும், நீண்ட காலமாக எனக்கு ஒரு நண்பராகவும் இருக்கும், சீனாவின் மிகவும் மரியாதைக்குரிய அதிபருடன் இருப்பது ஒரு பெரிய மரியாதை என்றார் டிரம்ப்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறும்போது, இரு நாடுகளும் எப்போதும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை என்றாலும், இது இயல்பானது. உலகின் இருபெரும் பொருளாதாரங்கள் சரியான பாதையில் செல்ல வேண்டும், சீனாவின் வளர்ச்சி, அமெரிக்காவை மீண்டும் great ஆக மாற்றும் டிரம்ப்பின் பார்வைக்கு இணையாகச் செல்கிறது என்று நான் நம்புகிறேன். சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாகவும் நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என்றார் ஜி ஜின்பிங்.
அவர் மேலும் கூறுகையில், காசா அமைதி ஒப்பந்தம் மற்றும் தாய்லாந்து-கம்போடியா மோதல் போன்ற விஷயங்களில் டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன் என்றார்.
டிரம்ப் பதவியேற்றதில் இருந்து சீனப் பொருட்களின் மீதான வரிகளை கடுமையாக உயர்த்தியுள்ளார், இதனால் வர்த்தகப் போர் சூடுபிடித்தது. சமீபத்தில், உயர் தொழில்நுட்பப் பயன்பாடுகளுக்கு முக்கியமான அரிதான மண் கனிமங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க பெய்ஜிங் முன்மொழிந்ததால் பதற்றம் மீண்டும் அதிகரித்தது.
இந்த பதட்டமான நிலையில்தான் இரு அதிபர்களும் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பு, இரண்டு தலைவர்களுக்கும் இடையேயான நீண்டகால பேச்சுவார்த்தை செயல்முறைக்கு ஒரு தொடக்கப் புள்ளியாக அமையும் என்று வெள்ளை மாளிகை நம்புகிறது.