தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

Su.tha Arivalagan
May 10, 2025,08:29 PM IST

வாஷிங்டன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் உடனடியாக மோதலைக் கைவிட ஒப்புக் கொண்டுள்ளன என்ற மகிழ்ச்சியான தகவலை தெரிவிக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்க அதிபர் இதுதொடர்பாக வெளியிட்ட ட்வீட்டைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடையே நிலவி வரும் போர்ப் பதட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்தியத் தரப்பிலோ அல்லது பாகிஸ்தான் தரப்பிலோ இதுவரை அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.


முன்னதாக அதிபர் டிரம்ப் ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில், அமெரிக்காவின் மத்தியஸ்தம் மூலமாக நீண்ட இரவு நேர பேச்சுவார்ததை நடைபெற்றது. அதில் இந்தியாவும், பாகிஸ்தானும் முழு அளவிலும், உடனடியாகவும் தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்டன. இரு நாடுகளின் தலைவர்களும் புத்திசாலித்தனமாகவும், பொது அறிவுடனும் நடந்து கொண்டது மகிழ்ச்சி தருகிறது. இரு நாட்டுத் தலைவர்களையும் வாழ்த்துகிறேன் என்று டிரம்ப் கூறியிருந்தார்.



இதைத் தொடர்ந்து தற்போது மார்கோ ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில்,  கடந்த 48 மணி நேரத்தில் நானும், துணை அதிபர் டி வான்ஸும் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினோம். இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர், இரு நாட்டுத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களான அஜீத் தோவல்,  ஆசிம் மாலிக் ஆகியோரும் அடங்குவர்.


இந்தப் பேச்சுவார்த்தையின் விளைவாக இரு நாடுகளும் உடனடியாக தாக்குதலை நிறுத்தவும், பிரச்சினைகளின் அடிப்படையில் நடுநிலையான இடத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானித்துள்ளன. அமைதிப் பாதையை தேர்வு செய்ய முன்வந்த இரு நாட்டு பிரதமர்கள் நரேந்திர மோடி மற்றும் ஷெரீப் ஆகிய இருவரின் புத்திசாலித்தனம், தலைமைத்துவப் பண்பை அமெரிக்கா பாராட்டுகிறது என்று கூறியுள்ளார்.


அமெரிக்காவின் இந்த அறிவிப்பு பலருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இரு நாடுகளும் எங்கு வைத்துப் பேச்சுவார்த்தை நடத்தப் போகின்றன என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனேகமாக அமெரிக்காவிலேயே வைத்துக் கூட பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.