ஆபரேஷன் சிந்தூரின்போது.. 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டொனால்ட் டிரம்ப் புதுத் தகவல்
டெல்லி: பால்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த ராணுவ மோதலில் "ஐந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகையில் குடியரசுக் கட்சி எம்பிக்களுடன் நடந்த ஒரு தனிப்பட்ட விருந்தில் அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார், ஆனால் எந்த நாட்டின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே தான் புகுந்து சமரசம் செய்து வைத்ததாகவும், தான் சொன்னதைக் கேட்டபிறகே இந்தியாவும், பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்தின என்று டிரம்ப் கூறி வந்தார். டிரம்ப் சமரசம் செய்து வைக்கவில்லை என்று இந்தியா இதை திட்டவட்டமாக மறுத்து வந்தது.
இந்த நிலையில் ஐந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளார் டொனால்ட் டிரம்ப். அது பாகிஸ்தான் விமானமா, இந்திய விமானமா என்பதை மட்டும் டிரம்ப் சொல்லவில்லை. இதுகுறித்து எம்.பிக்களிடம் அவர் பேசும்போது, உண்மையில், விமானங்கள் வானத்திலிருந்து சுட்டு வீழ்த்தப்பட்டன. ஐந்து, ஐந்து, நான்கு அல்லது ஐந்து, ஆனால் நான் நினைக்கிறேன் ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன, என்று கூறினார் டிரம்ப்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மே மாத தொடக்கத்தில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறி வைத்து அதிரடித் தாக்குதல் நடத்தியது. பதிலடித் தாக்குதலில் குதித்து பாகிஸ்தான், இந்தியாவின் கடுமையான அதிரடியைப் பார்த்து பயந்து போய் போரை நிறுத்த ஒத்துக் கொண்டது என்பது நினைவிருக்கலாம்.
அதன் பின்னர் பாகிஸ்தான் தனது விமானப்படை நடத்திய தாக்குதலில், இந்திய விமானப்படையின் மூன்று ரபேல் போர் விமானங்கள், சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இந்திய விமானிகள் பிடிபட்டதாகவும் தொடர்ந்து கூறி வந்தது பாகிஸ்தான். ஆனால் இதற்கு எந்த ஆதாரத்தையும் அது காட்டவில்லை.
இந்திய தரப்பில், ரபேல் போர் விமானங்கள் எதுவும் இழக்கப்படவில்லை என்றும், எந்த இந்திய விமானியும் பிடிக்கப்படவோ அல்லது தடுத்து வைக்கப்படவோ இல்லை என்றும் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.