கத்தார் இயற்கை எரிவாயு நிலையத்தை அதிரடியாகத் தாக்கிய ஈரான்.. அமெரிக்கா அதிர்ச்சி
தோஹா: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி மையமான கத்தாரின் ராஸ் லஃப்பான் நகரம் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக அமெரிக்கா கடும் அதிர்ச்சியைச் சந்தித்துள்ளது.
இதையடுத்து இஸ்ரேல், இனி ஈரான் எரிவாயு நிலையங்களைத் தாக்காது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். அதேபோல ஈரானும் இதுபோன்ற தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை அன்று ஈரானின் மிகப்பெரிய எரிவாயு வயலான தெற்கு பார்ஸ் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இதனால் கடும் கோபமடைந்த ஈரான், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை வேளைகளில் கத்தாரில் உள்ள எரிசக்தி நிலையங்களை இலக்கு வைத்து ஏவுகணைகளை ஏவியது. இதில் கத்தார் எனர்ஜி நிறுவனத்திற்கு சொந்தமான பல இடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. அதேசமயம், உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
உலகின் மிகப் பெரிய திரவ இயற்கை எரிவாயு நிலையம் தகர்க்கப்பட்டால் அது உலக அளவில் பெரும் ஸ்தம்பிப்பை ஏற்படுத்தும் என்பதால் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஈரானின் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்துள்ளன. இஸ்ரேல் தாக்குதலால்தான் இந்த ஈரான் பதிலடி என்பதால் இஸ்ரேல் மீது உலக நாடுகளின் கோபம் திரும்பியுள்ளது. இதை உணர்ந்த அமெரிக்கா தற்போது இஸ்ரேலை அமைதி காக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அமெரிக்காவிற்குத் தெரியாமல் நடத்தப்பட்டது. இனி ஈரானின் இந்த எரிவாயு தளம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தாது என உறுதி அளிக்கிறேன்.
ஆனால், ஒருவேளை ஈரான் மீண்டும் அப்பாவி நாடான கத்தாரின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா சும்மா இருக்காது. இஸ்ரேலின் உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஈரானின் ஒட்டுமொத்த தெற்கு பார்ஸ் எரிவாயு வயலையும் அமெரிக்கா முற்றிலும் அழித்துவிடும். ஈரான் இதுவரை பார்த்திராத பேரழிவைச் சந்திக்க நேரிடும்.
ஈரானின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இவ்வளவு பெரிய வன்முறையை நான் விரும்பவில்லை. ஆனால் கத்தார் மீது மீண்டும் கை வைத்தால், நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இந்த மோதலால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளதால் பரபரப்பு குறைவதாகத் தெரியவில்லை.