98% விழுக்காட்டைத் தாண்டியது.. இந்தியாவின் 6-வது ‘முழு எழுத்தறிவு’ பெற்ற மாநிலம் உத்தரகாண்ட்!

Su.tha Arivalagan
Jul 09, 2026,10:13 AM IST

டேராடூன்: கல்வித் துறையில் உத்தரகாண்ட் மாநிலம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்துள்ளது. அம்மாநிலத்தின் எழுத்தறிவு விகிதம் 98 விழுக்காட்டைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டதை அடுத்து, இந்தியாவின் 6-வது முழு எழுத்தறிவு பெற்ற மாநிலம் என்ற அந்தஸ்தை உத்தரகாண்ட் பெற்றுள்ளது.


மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை வகுத்துள்ள முதியோர் கல்விக்கான இலக்குகளை உத்தரகாண்ட் மாநிலம் வெற்றிகரமாக எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, உத்தரகாண்டை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கான ஒப்புதலை அம்மாநில ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) குர்மீத் சிங் வழங்கியுள்ளார்.


மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) மற்றும் உல்லாஸ் (ULLAS - Understanding Lifelong Learning for All in Society) திட்டத்தின் கீழ் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் விதிகளின்படி, 7 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 95% அல்லது அதற்கு மேல் எழுத்தறிவு பெற்ற மாநிலங்கள் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்படும். உத்தரகாண்ட் மாநிலம் தற்பொழுது 98.7% எழுத்தறிவை எட்டி இந்த இலக்கை வெகுவாகத் தாண்டியுள்ளது.




இதற்கு முன்னதாக இந்தியாவின் மிஸோரம், கோவா, திரிபுரா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய ஐந்து மாநிலங்கள் மட்டுமே இந்த முழு எழுத்தறிவு அந்தஸ்தைப் பெற்றிருந்தன. தற்போது அந்தப் பெருமைமிகு பட்டியலில் 6-வது மாநிலமாக உத்தரகாண்ட் இணைந்துள்ளது.


மாநிலத்தின் இந்த வரலாற்றுச் சாதனை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, இது உத்தரகாண்ட் மாநிலத்தின் மிக முக்கியமான மைல்கல். அரசின் தொடர் முயற்சிகளும், பொதுமக்களின் தீவிர பங்களிப்பும் இணைந்தே இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.