பயமின்றி வாழ்வோம் – பெண்களின் பலமே சமூகத்தின் பலம்!

Su.tha Arivalagan
Feb 26, 2026,02:54 PM IST
- வே. ஜெயந்தி

மார்ச் மாதம் பிறக்கப் போகிறது.. மாதரசிகளைக் கொண்டாடத் தயாராகி வருகிறது சமுதாயம்.. விதம் விதமான கொண்டாட்டங்களுக்குத் திட்டமிட்டு வருகிறார்கள் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும். மகளிர் தினம் என்பது ஒரு நாளின் கொண்டாட்டம் மட்டும் அல்ல; அது பெண்களின் தைரியம், உழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் சமூகத்தில் அவர்கள் வகிக்கும் முக்கிய பங்கை நினைவூட்டும் சிறப்பான நாள்.

இன்றைய காலத்தில் பல பெண்கள் தனித்து வாழும் சூழலில் உள்ளனர். கணவர் இல்லாத பெண்கள்  விதவை, விவாகரத்து பெற்றவர், அல்லது தனித்தாய்  இவர்களின் வாழ்க்கை சவால்களால் நிரம்பியிருக்கலாம்.

ஆனால் அவர்கள் இரக்கம் பெற வேண்டியவர்கள் அல்லர்; மரியாதை பெற வேண்டியவர்கள். அவர்கள் தைரியத்தின் சின்னங்கள்.
ஒரு பெண் பயமின்றி வாழ வேண்டுமெனில் முதலில் அவள் மனவலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். “நான் முடியும்” என்ற நம்பிக்கை வாழ்க்கையை மாற்றும் சக்தி உடையது.





தன்னம்பிக்கை உள்ள இடத்தில் பயம் நீங்கும். பொருளாதார சுயநிலை மிகவும் அவசியம். கல்வி, தொழில், திறன் மேம்பாடு போன்றவை பெண்களை யாரையும் சாராமல் தன்னிறைவுடன் வாழ உதவுகின்றன. தன் காலில் நின்று வாழும் பெண்ணை சமூகம் மதிக்கத் தொடங்கும்.

சில சமயங்களில் பெண்களின் நிலையைப் பயன்படுத்த முயலும் கயவர்கள் இருக்கலாம். அவர்களிடமிருந்து காத்துக்கொள்ள பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையற்ற நெருக்கங்களைத் தவிர்த்தல், சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு பெறுதல், அவசர உதவி எண்கள் அறிதல், சுயபாதுகாப்பு பயிற்சி கற்றுக்கொள்வது போன்றவை பாதுகாப்பை அதிகரிக்கும். நல்ல நண்பர்கள் வட்டமும் குடும்ப ஆதரவும் உறுதுணையாக இருக்கும்.

பெண் தனியாக வாழ்வது பலவீனம் அல்ல; அது தன்னம்பிக்கை மற்றும் தன்னிறைவு வாழ்வின் அடையாளம். இன்று பெண்கள் கல்வி, அறிவியல், விளையாட்டு, நிர்வாகம், தொழில் முனைவோர் துறை என அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். சவால்கள் வந்தாலும், தைரியமும் உறுதியும் இருந்தால் வெற்றி நிச்சயம்.

பெண் உயர்ந்தால் குடும்பம் உயரும்; குடும்பம் உயர்ந்தால் நாடு உயரும். பயம் இல்லாமல் வாழும் பெண்களே நாளைய சமுதாயத்தை உருவாக்குவார்கள்.

(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)