ச்சும்மா.. சோம்பேறித்தனம்!

Su.tha Arivalagan
Dec 30, 2025,10:12 AM IST

- வ. சரசுவதி


சூரியன் எழுந்து காலத்தின் கதவைக் கைத்தட்டி அழைத்தாலும் இன்னும் சற்று நேரம், நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று போர்வைக்குள் ஒளியும் ஆசையுடன் மூடிவிடும் மனம்.... 


கனவுகள் பல கண்டு

கண் விழித்துக் காத்திருக்கும் வேளையில்,

பயம்,சோம்பல்,தயக்கம்

மூன்றும் சேர்ந்து




மனதின் கதவைப்பூட்டும் வேளையில் 

உறக்கம் மட்டும் 

அதிகாரம் செலுத்துகிறது.


நாளை செய்வோம் என்ற

ஒரே சொல்லில்,

இன்று தவிர்த்த வேலை,


நாளைய  பாரமாய் மாறி,

இன்றைய உழைப்பு 

மெதுவாக மறைந்து,


நேரம் நம்மை முந்திச் சென்று,

கேள்வி கேட்கும் போது 

மௌனமாய் நிற்கும் மனிதன்.


சோம்பேறித்தனம் 

ஓய்வு அல்ல....

அது வாழ்க்கையை 

மெதுவாக நிறுத்தும் பிரேக்.


அது முயற்சியின் மறைமுக எதிரி;

நம்பிக்கையைச் சுருக்கும் 

மென்மையான சங்கிலி, 


ஒரு முயற்சி,

ஒரு எழுச்சி,

ஒரு தொடக்கம்----

அதுவே சோம்பேறித் தனத்தின் 

முதல் தோல்வி.


இன்று தொடங்கினால் 

நாளை ஒளி;

இப்போது எழுந்தால் 

எதிர் காலம் நம்முடன்--


சோம்பேறித்தனத்தை 

விடைபெறச் செய்து,

உழைப்பை நண்பனாக்குவோம்.


(சரசுவதி சிவக்குமார், திருமங்கலம், மதுரை. செள. பொட்டிப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு தளங்களில் கவிதை, கட்டுரைகள் படைத்து வருகிறார்)