பேரன்பு பேராற்றல்.. இரண்டின் கூட்டு வடிவம்.. வாஜ்பாய்.. வைரமுத்து புகழாரம்

Su.tha Arivalagan
Dec 25, 2025,05:18 PM IST

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாளையொட்டி கவிஞர் வைரமுத்து அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.


மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டு பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்களும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர். அந்த வரிசையில் கவிஞர் வைரமுத்துவும் தனது பாணியில் கவிதாஞ்சலி செய்துள்ளார்.


இதுதொடர்பாக வைரமுத்து எழுதிய கவிதை:




பேரன்பு பேராற்றல்

இரண்டின் கூட்டுவடிவம்

வாஜ்பாய்


கொள்கையில் தலைவன்

குணத்தில் குழந்தை


அவர் 

பிரதமராக இருந்தபொழுது

இந்தியிலிருந்து

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட

அவரது கவிதை நூலை

பிரதமர் இல்லத்தில் 

வெளியிட்டுப் பேசினேன்


“நீங்கள் விரும்பினால்

என்றேனும் ஒருநாள்

முன்னாள் பிரதமர் ஆகலாம்;

ஆனால், நீங்கள் என்ன முயன்றாலும்

முன்னாள் கவிஞர் ஆகமுடியாது” 

என்றேன்


“என்னைச் சிகரத்தில் ஏற்றாதீர்கள்

அங்கே எனக்கு

இருக்கையிட இடமிருக்காது”

என்ற அவரது கவிதையை

மேற்கோள் காட்டினேன்


பின்னொரு சந்திப்பில்

இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட

என் கவிதைகளை

அவர் வாய்விட்டுப் படித்து

வாய்விட்டுச் சிரித்தார்


என் தலைக்கு மேல்

தங்க நாணயங்கள்

சிதறிய தருணம் அது


இன்று

நூற்றாண்டு காணும் நாயகரே!


பல நூற்றாண்டுகள்

நினைக்கப்படுவீர்