இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு வைரமுத்து கோரிக்கை!

Meenakshi
Aug 02, 2025,04:52 PM IST

சென்னை: சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது இந்தியாவின் தேசிய நூலாக  திருக்குறளை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு வைரமுத்து கோரிக்கை வைத்து பதிவு வெளியிட்டுள்ளார்.


நாட்டின் 79வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுவார். அந்த வகையில் இந்தாண்டு உரையில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.


இதனையடுத்து, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்  என்று கவிஞர் வைரமுத்து பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து, தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,


மாண்புமிகு 

இந்தியப் பிரதமர் அவர்களே!




தங்களின்

விடுதலைத் திருநாள் பேருரைக்கு

மக்கள் கருத்துக்கு அழைப்புவிடுத்த

தங்கள் மாண்புக்கு

என் ஜனநாயக வணக்கம்


தமிழ்நாட்டிலிருந்து

ஓர் இந்தியனாக எழுதுகிறேன்


தாங்கள் 

காலமெல்லாம் போற்றிவரும்

திருக்குறள்

இனம் மொழி மதம் நாடுகடந்த

உலகத்தின் அசைக்கமுடியாத

அறநூல்


மனிதம் என்ற

ஒற்றைக் குறிக்கோளை

உயர்த்திப் பிடிப்பது


அதனை

இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பது

தமிழர்களின் நீண்ட கனவு

மற்றும்

நிறைவேறாத கோரிக்கை


இந்தியாவின்

79ஆம் விடுதலைத் திருநாள் பேருரையில்

திருக்குறள்

இந்தியாவின் தேசிய நூலாக

அறிவிக்கப்படும் என்ற நல்லறிவிப்பை

வெளியிட வேண்டுகிறோம்


தாங்கள்

கேட்டுக்கொண்ட வண்ணம்

நமோ செயலியிலும்

இதனைப் பதிவிடவிருக்கிறோம்


இது

உலகப் பண்பாட்டுக்கு

இந்தியா கொடுக்கும் கொடை 

என்று கருதப்படும்;

ஆவனசெய்ய வேண்டுகிறோம்


ஆகஸ்ட் 15 அன்று

தொலைக்காட்சி முன்னால் 

ஆவலோடு காத்திருப்போம் என்று தெரிவித்துள்ளார்.