வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்
கோவை : வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி உடல் நலக்குறைவால் காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார்.
வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ.,வாக இருந்தவர் அமுல் கந்தசாமி. இவருக்கு வயது 60. இவர் அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளராகவும் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அமுல் கந்தசாமி, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பகல் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமுல் கந்தசாமியின் மறைவிற்கு அதிமுக நிர்வாகிகள், தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் வால்பாறை அதிமுக எம்எல்ஏ., உயிரிழந்துள்ளதால் அந்த தொகுதி காலியாகி உள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வால்பாறை தொகுதிக்கு எந்த நேரத்திலும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், சட்டசபை பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலமே இருப்பதால் பொதுத் தேர்தலுடன் சேர்த்து தேர்தலை நடத்தவும் வாய்ப்புள்ளது.